அகரம் நீ!
- படம்: சரஸ்வதி சபதம்
- பாடல்: அகரமுதல எழுத்தெல்லாம்
- எழுதியவர்: கண்ணதாசன்
- இசை: கே. வி. மகாதேவன்
- பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
- Link: http://www.youtube.com/watch?v=Pb2GiPNrGTw
அகர முதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய், தேவி!
ஆதி பகவன் முதல் என்றே உணரவைத்தாய், தேவி!
இயல், இசை, நாடக தீபம் ஏற்றிவைத்தாய் நீயே!
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே!
உயிர், மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்,
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்,
எண்ணும் எழுத்து என்னும் கண் திறந்தாய்,
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்,
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்,
ஒலி தந்து, மொழி தந்து குரல் தந்தாய்,
ஓம்கார இசை தந்து உயரவைத்தாய், தேவி!
தமிழின் உயிர் எழுத்துகள் வரிசையில் கண்ணதாசன் எழுதிய பக்திப் பாடல் இது. கே. வி. மகாதேவனின் இசை, டி. எம். எஸ். அவர்களின் கம்பீரமான குரலால் இன்னும் அழகு பெற்றது.
இந்தப் பாடலை எழுதிப் பல ஆண்டுகளுக்குப்பிறகு, இதே பாணியில் இயேசுநாதரைப்பற்றியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் கண்ணதாசன். அவரது புகழ் பெற்ற ‘இயேசு காவியம்’ நூலில் இடம்பெற்ற கவிதை அது:
அடுத்தவர் இடத்தில் அன்பு காட்டியும்
ஆடல், பாடல் அணுகாதிருந்தும்,
இழந்தோர் இடத்தே இரக்கம் மிகுந்தும்
ஈகை உதவி இதயம் மலர்ந்தும்
உறவோர் இடத்து உள்ளன்பு வைத்தும்
ஊரார் புகழப் பணிவுடன் நடந்தும்
என்றும் தந்தை எதைச் சொன்னாலும்
ஏற்று முடித்தும் இயல்புற வாழ்ந்தும்
ஐயம் தவிர்க்க ஆசானை அணுகியும்
ஒத்த வயதே உடையோர் இடத்து
ஓதும் பொருளில் உயர்ந்தே நின்றும்…
கண்ணதாசன் இதோடு நிறுத்தவில்லை, க, கா, கி, கீ வரிசையில் கவிதையைத் தொடர்கிறார். இப்படி:
கன்னித் தாயின் காலடி வணங்கியும்
காலம் அறிந்து கணக்குற வாழ்ந்தும்
கிட்டாதாயின் வெட்டென மறந்தும்
கீழோர், மேலோர் பேதம் இன்றியும்
குணத்தில் தேவ குமாரன் என்று உலகம்
கூப்பி வணங்கக் குறைகள் இலாமலும்
கெட்ட பழக்கம் எட்டா நிலையில்
கேடுகள் எதையும் நாடாத அளவில்
கைத்தலத்துள்ளே காலத்தை அடக்கியும்
கொஞ்சி வளர்ந்து குழந்தையில் இருந்து
கோமகன் வயதில் ஆறிரண்டு அடைந்தார்!
***
என். சொக்கன் …
23 06 2013
204/365
D sundarvel 11:34 am on June 23, 2013 Permalink |
இரண்டு பாட்டுமே மிக நன்றாக இருக்கிறது.
rajnirams 11:57 am on June 23, 2013 Permalink |
அப்பப்பா,என்ன தமிழ்! கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு காவியம்,நாளை அவர் பிறந்த தினத்திற்கு இது உங்களின் “முன்னோட்டம்”. திருவிளையாடலில் வரும் “ஒன்றானவன் உருவில் இரண்டானவன் பாடலின் சிறப்பையும் நினைத்து வியந்து மகிழ்கிறேன்.
GiRa ஜிரா 12:27 pm on June 23, 2013 Permalink |
பொதுவா கவிதைன்னு எழுதும் போது சுதந்திரம் இருக்கும். என்ன வேணும்னாலும் எழுதலாம். என்னென்ன சோதனை வேணுமோ அதெல்லாம் செய்யலாம்.
ஆனா சினிமாப்பாட்டுக்குள்ள நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. அதையும் மீறி இந்த மாதிரியெல்லாம் எழுதும் போதுதான் தமிழின் வலிமையும் கவிதையின் பெருமையும் கவிஞனின் திறமையும் தெரியுது.
நல்லா எடுத்துச் சொன்னிங்க. ரசித்தேன்.
சிவா கிருஷ்ணமூர்த்தி 1:02 pm on June 23, 2013 Permalink |
பாடலாக கேட்டு ரசிப்பது ஒரு வகை ரசனை என்றால் இந்த மாதிரி வரிகளாக படித்து தமிழை வியப்பது இன்னொரு வகையான ரசனை…சொக்கன் மற்றும் மற்ற நண்பர்களினால் தற்போது தினமும் இந்த வகையாக சுவைத்து வருகிறேன். வாழ்க, நன்றி!
சிவா கிருஷ்ணமூர்த்தி
amas32 8:10 pm on June 23, 2013 Permalink |
சரஸ்வதி சபதம் படத்தில் வரும் பாடல் பலமுறை பாடலாகக் கேட்டதால் எளிமையாக ஒலிக்கிறது.
ஏசு காவியத்தில் வரும் பாடல் இன்று தான் உங்கள் உபயத்தில் முதல் முறை படிக்கிறேன்.
அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா என்ற மீட்டரில் உள்ளது. ஒரு முறை படித்தவுடன் மனத்தில் நன்கு பதிந்து விட்டது. எல்லாம் கவிஞரின் கை வண்ணம்!
amas32
Uma Chelvan 9:28 am on June 24, 2013 Permalink |
இந்த பாடலும் ” ஒன்றானவன் உருவில் இரண்டானவன் ” பாடலும் மிக சிறப்பானவை. ஏசுநாதர் பாடல் இதுவரை கேட்டது இல்லை. Thanks for that.