எது அழகு?
அழகைக் கண்களால் உணரலாம் என்று திரைப்படக் கவிஞர்கள் எத்தனையோ பாட்டெழுதிவிட்டார்கள்.
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு – என்று புதியமுகம் படத்துக்காகவும்
நீ நடந்தால் நடையழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
நீ பேசும் தமிழழகு
நீயொருவன் தான் அழகு – என்று பாட்சா படத்துக்காகவும் வைரமுத்து அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
இவையெல்லாம் காதலில் விழுந்தவர்கள் வழக்கமாகச் சொல்வதுதானே.
கண்ணால் காண முடியாத அழகுகள் இருக்கின்றவா? இருந்தால் எவையெவை? அவைகளை எப்படி உணர்ந்து கொள்வது?
அதிவீரராமபாண்டியன் என்ற மன்னன் வெற்றிவேற்கை என்னும் நீதி நூலில் பலவித அழகுகளைப் பட்டியலிட்டுள்ளார். இவர் கொற்கையை ஆண்டு வந்த பாண்டிய மன்னன்.
முத்துக்குளிப்பதனால் கொற்கை பாண்டியர்களுக்கு இரண்டாம் தலைநகரமாக இருந்தது. பாண்டிய மன்னனின் தம்பியோ மகனோ அங்கிருந்து ஆட்சி செய்வதும் உண்டு.
வெற்றிவேற்கைக்கு நறுந்தொகை என்றும் ஒரு பெயருண்டு. இந்த நூலில் பலவித அழகுகளைக் கூறியிருந்தாலும் சில அழகுகள் இந்தக் காலத்துக்கு ஏற்பில்லாதவை என்று நான் கருதுகிறேன். அவர் பட்டியலிட்டவைகளை படிப்பதற்கு எளிதாக நான் சீர் பிரித்தே கொடுத்திருக்கிறேன்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
கல்விக்கு அழகு கசடற மொழிதல்
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை
வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்
உழவர்க்கு அழகு இங்கு உழுது ஊண் விரும்பல்
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல்
குலமகட்கு அழகு கொழுநனைப் பேணுதல்
விலைமட்கு அழகு தன்மேனி மினுக்குதல்
அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் என்பது அன்றைய நிலை. வரும் பொருள் மறைத்தல் என்பது நிலை.
உழவர்க்கு அழகு உழுது ஊண் விரும்பல். ஆனால் இன்றைக்கு வேளாண்மை கீழாண்மையாகிப் போன தமிழகத்தில் உழுதுதான் உண்ண வேண்டுமென்றால் பட்டினிதான் எல்லாருக்கும்.
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல். இதைத் சொன்ன அதிவீரராமபாண்டியன் மட்டும் இன்றைக்கு தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்தால் பெண்டிர்க்கழகு பேசாமல் இருத்தல் என்று மாற்றி எழுதினாலும் எழுதி விடுவார்.
மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை என்று அதிவீரராம பாண்டியர் நேர்மையாக எழுதி விட்டார். அவர் அந்தக் காலத்து மனிதர். அப்படிச் செங்கோன் முறை கெடாமல் ஆட்சி நடக்க முடியாமல் போனதாலோ என்னவோ இன்று மன்னராட்சி மறைந்து மந்திரியாட்சி நடக்கிறது. அவர்களுக்கு செங்கோன் முறைமை என்று யாரும் சொல்லவில்லையே!
அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல். கற்றால் மட்டும் போதாது. அதை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்தால்தான் அடக்கம் வரும். அந்த அடக்கம் அமரருள் உய்க்கும். ஆனால் இன்றைய இலக்கியச் சூழலில் அறிஞர்க்கு அழகு கற்றவரை மடக்கல். ஒரே சண்டைக்காடாக இருக்கிறது இலக்கியச் சூழல்.
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை. கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்று வள்ளுவர் கூறுவதும் இதுதான். ஆனாலும் பெற்றவர்களோ பிள்ளைகளோ பட்டினியால் தவிக்க செம்மையாக இருப்பது என்பது இயலாது என்பது என் கருத்து.
சரி. இந்த அழகுகளைப் பற்றி நான் கருத்துகளை அள்ளி விடுவது இருக்கட்டும். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – கண்ணுக்கு மையழகு
வரிகள் – வைரமுத்து
பாடியவர் – பி.சுசீலா
இசை – ஏ.ஆர்.ரகுமான்
படம் – புதியமுகம்
பாடலின் சுட்டி – http://youtu.be/gA6edwZpXXUபாடல் – நீ நடந்தால் நடையழகு
வரிகள் – வைரமுத்து
பாடியவர் – சித்ரா
இசை – தேவா
படம் – பாட்சா
பாடலின் சுட்டி – http://youtu.be/Ah9vOUzrffg
அன்புடன்,
ஜிரா
191/365
anonymous 10:31 am on June 10, 2013 Permalink |
“அழகு” ஆன பதிவு!
*அழகே தமிழே நீ வாழ்க-அமுதே உந்தன் புகழ் வாழ்க!
இன்னும் சில அழகுப் பாடல்கள்:
*அழகே அழகு தேவதை
*அழகு மலராட, அவிநயங்கள் சூட
*ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
*அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
*அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்
*அழகான பொண்ணு நான்; அதுக்கேத்த கண்ணு தான்
anonymous 11:07 am on June 10, 2013 Permalink |
இலக்கியத்திலும் பலப்பல அழகு!
அழகு = முருகு, எழில், ஏர், கவின்,
கோலம், பொற்பு, வனப்பு, அணி -ன்னு…
அழகுக்குத் தான் தமிழில் எத்தனை எத்தனை பெயர்கள்! எத்துணை அழகு!
“அணி” இலக்கணம் என்பதே அழகு தானே!
——
முருகன் (அ) அழகு
அழகர் -ன்னே, மதுரைக் கள்ளழகருக்குப் பேரு!
குழல் அழகர், வாய் அழகர், கண் அழகர், கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -ன்னு நாச்சியார் திருமொழி!
——
வெற்றி வேற்கைப் பாட்டிலும் எத்தனை அழகுகளைப் படம் புடிச்சிக் காட்டியிருக்கான் இந்தப் பாண்டியன்!
= அத்தனையும் “வாழ்க்கை அழகு”!
*ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் -ன்னு, வேண்டாம்/வேண்டாம் -ன்னு -ve word வச்சி எழுதுனது = உலகநீதி;
*கல்விக்கு அழகு, செல்வர்க்கு அழகு -ன்னு, அழகு/அழகு -ன்னு +ve word வச்சி எழுதுனது = வெற்றி வேற்கை!
வெற்றி வேல் கை வீர ராமன் -ன்னு தொடங்குவதால்,
முதல் வரியான “வெற்றி வேற்கை” -ன்னே புத்தகத்துக்கும் பேரு வச்சிட்டாங்க (ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போல)
ஆனா, இதுக்கு “நறுந்தொகை” என்ற பேரும் உண்டு!
*குறுந்தொகை
*நெடுந்தொகை = அகநானூறு
*நறுந்தொகை = வெற்றி வேற்கை
anonymous 11:28 am on June 10, 2013 Permalink |
ஒவ்வொரு “அழகும்” இரண்டு-மூனு வாட்டிப் படிச்சிப் பார்த்தேன்:)
ரொம்ப நல்லா இருக்கு!
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் = இறைவனுக்கு அழகு-ன்னு ஆரம்பிக்கலை பாருங்க!
கல்விக்கு அழகு கசடற மொழிதல் = அதானே? கற்ற கல்விக்கு அழகு, கசடு இல்லாமச் சொல்லணும்; ஆதாரங்களை ஆய்ந்து, உமியைத் தள்ளி, அரிசியை மட்டுமே சமைக்கணும்;
சாப்பாடு = அப்படி/ இப்பிடி இருக்கலாம்!
ஆனா கசடு = கல்லு/ மண்ணு சோற்றுல இருக்கக் கூடாது;
கசடு அற + மொழிதல் = நம் கசடு முதலில் அறணும்; அப்பறம் தான் நாம பேசவே துவங்கலாம்;
நம்ம கசடை அறுத்துக்கிட்டு, அப்பறமா, பிறர் கசடையும் முடிஞ்சா நீக்க உதவலாம்;
——–
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் = even though we are not chelvar, compared to poor we are chelvar only; how many of us support under privileged?
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் = no comments:)
மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் = வரும் பொருள் எடுத்தல் -ன்னு மாறிப் போச்சு:(
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை = dunno; can someone explain?
anonymous 11:57 am on June 10, 2013 Permalink |
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல் = not at all
women shd speak – both for & against
அதான், கல்விக்கு அழகு கசடற மொழிதல் -ன்னு சொல்லியாச்சே; ஆண் கல்வி & பெண் கல்வி, both
//குலமகட்கு அழகு கொழுநனைப் பேணுதல்//
=கொழுநனுக்கு அழகு, குலமகள் பேணல் -ன்னும் Corollary-யும் சொல்லணும்; duty definitions apply to both
//விலைமட்கு அழகு தன்மேனி மினுக்குதல்//
=he he; no comments; but very true:)
தாசன்/ தாசி வேடம் போட்டா, மினுக்கித் தானே ஆகணும்?
————–
//அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்//
=போட்டான்-யா பாண்டியன், இன்றுள்ள தமிழ்ச் சூழல்!
தமிழ் அறிஞர்கள் போயி,
இன்னிக்கி “வணிகத் தமிழ் அறிஞர்களாக்” குவிஞ்சி கிடக்குறாங்க:(
தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களையே, தரவு காட்டச் சொல்லி, எதிர்க் கேள்வி கேட்டாரு மறைமலை அடிகள்;
ஆனா அந்தக் கேள்வியில் “தமிழ்” இருந்ததே அன்றி, “தான்” இல்லை! = கருத்து வேற, மனிதம் வேற!
ஆனா, தமிழர்களுக்கு, ஒரு இலக்கியவாதி கிட்ட எப்படிக் கைகட்டிப் பேசறது?-ன்னே தெரியலை -ங்கிற level க்கு வந்துட்டோம்:)
*கற்று = Learn
*உணர்ந்து = Feel
*அடங்கல் = Learn, you haven’t learnt anything “great”;
அறி தோறும், அறியாமை கண்டற்றால்……
Kannabiran Ravi Shankar (KRS) 12:01 pm on June 10, 2013 Permalink |
Forgot one small thing; “அழகு” நாலடியாரிலும் வருது:)
குஞ்சி அழகும், கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு!!
rajnirams 7:30 pm on June 10, 2013 Permalink |
அருமையான பதிவு.மேலும் அழகான பாடல்கள்-என்ன அழகு எத்தனை அழகு-லவ் டுடே ,அழகுக்கு மறு பெயர்-அன்னமிட்ட கை,உன்னழகை கண்டு-பூவும் பொட்டும்,அழகு 1000-உல்லாச பறவைகள்,அழகின் காலடியில்-சினேகிதி,அவள் அப்படி ஒன்றும் அழகில்லை-அங்காடி தெரு.அழகு சிரிக்கின்றது-இருவர் உள்ளம்,நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழ கோ-உ.சு.வாலிபன்.அழகிய தமிழ்மகள்-ரிக்ஷாக்காரன்.
Saba-Thambi 6:30 pm on June 11, 2013 Permalink |
அழகான பதிவு!
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
காவல் தானே பாவையர்க்கு அழகு
கொன்றைவேந்தன்
மற்றுமொரு பாடல்
அழகே அழகு தேவதை –
( http://www.youtube.com/watch?v=jqCH3PK6GxQ)