கண்ணால கனவுகள்
- படம்: எங்க சின்ன ராசா
- பாடல்: கொண்டச் சேவல் கூவும் நேரம்
- எழுதியவர்: வாலி
- இசை: சங்கர் கணேஷ்
- பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
- Link: http://www.youtube.com/watch?v=xXXUzmo_Az8
அன்னாடம் வெளக்குவெச்சா, அத நெனச்சே எளச்சேனே!
கண்ணாலம் முடியட்டுமே, அதுக்குதான் இருக்கேனே!
நாள் கெழம ஒண்ணு பார்க்கணுமா?
ஆக்கிவெச்சா தின்னு தீர்க்கணுமா?
கல்யாணக் கனவுகளில் இருக்கும் ஒரு ஜோடி பாடுவதாக வரும் பாடல் இது. ’தினமும் மாலை வந்ததும் உன்னை நினைத்து என் உடல் இளைக்கிறது!’ என்கிறான் அவன், ‘என்ன அவசரம்? கல்யாணம் முடியட்டுமே!’ என்கிறாள் அவள்.
ம்ஹூம், ‘கண்ணாலம் முடியட்டுமே’ என்கிறாள்.
கிராமத்து ஜோடி, ‘கல்யாண’த்தைக் ‘கண்ணாலம்’ என்றுதான் சொல்வார்கள். இது ஒரு பெரிய விஷயமா?
அவ்வளவு ஏன்? கல்யாணக் கனவுகளுக்காகவே புகழ் பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள்கூட ஒரு பாடலில் ‘கண்ணாலம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறாள்:
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்,
திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணும் ஊர், பேரும் அரங்கமே!
நமக்கெல்லாம் தெரிந்த சினிமாக் கதைதான், கண்ணனைக் காதலித்தாள் ருக்மிணி. ஆனால், அவளுடைய தந்தை பீஷ்மகன் அவளைச் சிசுபாலனுக்குத் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தான்.
‘என்னை மீறி யார் ருக்மிணிமீது கை வைக்கமுடியும்?’ என்று அந்தச் சிசுபாலன் தன் வலிமைமீது கர்வம் கொண்டிருந்த நேரம், அவன் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில் ருக்மிணியைக் கொத்திக்கொண்டு போய்விட்டான் கண்ணன். அவன் எழுந்தருளிக் காக்கும் ஊர், ஸ்ரீரங்கம்!
(பின்குறிப்பு: தலைப்பில் ‘க்’ விடுபட்டிருப்பது சந்திப் பிழையல்ல, சிலேடைக்காகச் செய்யப்பட்ட வம்புப் பிழை ;))
***
என். சொக்கன் …
05 06 2013
186/365
anonymous 3:03 pm on June 5, 2013 Permalink |
//அன்னாடம் வெளக்குவெச்சா, அத நெனச்சே எளச்சேனே!//
விளக்கு வைக்கறத்துக்கும், “இளைப்பதற்கும்” என்ன சம்பந்தம்?
சரியாவே புரியல ஒங்க விளக்கம்; ஐயம் திரிபற விளக்குங்க:)))
anonymous 3:23 pm on June 5, 2013 Permalink |
//ஆண்டாள் கூட ஒரு பாடலில் ‘கண்ணாலம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யிருக்கிறாள்//
அவ கெடக்குறா; my dear thozhi is லூசு:)
மற்ற ஆழ்வார்களும், have used “கண்ணாலம்”
நாடும் நகரும் அறிய – நல்லதோர் ** கண்ணாலம் ** செய்து
வேடர் மறக்குலம் போலே – வேண்டிற்றுச் செய்து என்மகளை (பெரியாழ்வார்)
** கண்ணாலம் ** செய்யக் கறியும் கலத்து – அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல்!
கோலம் செய்து இங்கே இரு! (குலசேகராழ்வார்)
——–
இதைத், தமிழில் “மரூஉ மொழி” என்பார்கள் (மருவுதல்)
*கருப்புக் கட்டி = கருப்பட்டி
*மேனிக்கேடு = மெனக்கேடு (மெனக்கெட்டுப் போயி)
*சலிப்படை = சல்லடை
*மதுரை =மருதை
இடம் பிறழல், இடை நழுவல்,
நீளல், குறுகல், குறைதல், திரிதல் -ன்னு வரும் மருவு மொழிகள்
———
//அவன் எழுந்தருளிக் காக்கும் ஊர், ஸ்ரீரங்கம்!
btw itz திருவரங்கம்:)
ஆழ்வார்கள், எங்குமே ஸ்ரீரங்கம் -ன்னு பாடவே மாட்டாங்க!
=அரங்கம் (இல்லீன்னா) திருவரங்கம்
ஒரேயொரு இடத்தில் மட்டும்…
ஸ்ரீதரன்; அதைக் கூடச் சிரீதரன் -ன்னு ஆக்கிடுவாரு அந்த ஆழ்வார்:) Just fyi:))
anonymous 3:30 pm on June 5, 2013 Permalink |
//(பின்குறிப்பு: தலைப்பில் ‘க்’ விடுபட்டிருப்பது சந்திப் பிழையல்ல, சிலேடைக்காகச் செய்யப்பட்ட வம்புப் பிழை//
நீங்கள் செய்தது பிழையே அல்ல!
காரணப் பெயரான் வந்த தொழில் படு கிளவி:))
கண் + ஆலம்
*ஆலம் = Ice (ஆலங்கட்டி மழை -ன்னு சொல்றோம்ல்ல)
*கண் = கண்ணாலேயே Ice வைப்பதால் அல்லவோ, கண்ணாலம் நிகழ்கிறது?:)
அதனால், உங்கள் கிளவியாக்கத்தை, “பிழை” என்று குறுக்கி விடாதீர்கள்:)))
amas32 12:01 pm on June 6, 2013 Permalink |
இது நாள் வரை கண்ணாலம் என்பது எங்கள் அழகிய சென்னை தமிழ் என்று நினைத்திருந்தேன். இப்பொழுது தான் தெரிகிறது அது தொன்மையான தமிழ் வார்த்தை என்று 🙂
amas32