இலக்கிய வாசம்
- படம்: சிவா
- பாடல்: அடி வான்மதி
- எழுதியவர்: புலமைப்பித்தன்
- இசை: இளையராஜா
- பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா
- Link: http://www.youtube.com/watch?v=_NdoyW1CG1A
கோடைக் காலங்களில், குளிர் காற்று நீயாகிறாய்,
வாடை நேரங்களில், ஒரு போர்வை நீயாக வந்தாய்!
கண்கள் நாலும் பேசும் நேரம்,
நானும் நீயும் ஊமை ஆனோம்!
புலவர் புலமைப்பித்தனின் பாடல்களில் எப்போதும் இலக்கிய வாசனை இருக்கும், ஆனால் அது துருத்திக்கொண்டு தெரியாமல் மிக இயல்பாகச் சேர்த்திருப்பார்.
உதாரணமாக, இந்தக் காதல் பாடலை எடுத்துக்கொள்ளுங்கள், மேலோட்டமாகப் பார்த்தால் மீட்டருக்கு எழுதப்பட்ட வரிகளைப்போலதான் தெரியும். ஆனால் கொஞ்சம் ஆழச் சென்று பார்த்தால், திகைப்பு தோன்றும்.
முதல் இரு வரிகளை எடுத்துக்கொள்வோம் : கோடையின்போது என் உடலின்மீது ஜில் காற்றாக வீசிக் குளிர்ச்சி தருகிறவள் நீ, சில மாதங்கள் கழித்துக் குளிர் தொடங்கியபிறகு, நீயே எனக்குப் போர்வையாகிவிடுகிறாய், அதாவது, முன்பு குளிரைத் தந்த நீயே, இப்போது வெம்மையும் தருகிறாய்.
இப்போது, ’மன்னுயிர் அறியா’ எனத் தொடங்கும் ஒரு குறுந்தொகைப் பாட்டிலிருந்து ஒரு சிறிய பகுதி:
வேனிலானே தண்ணியள், பனியே
… சிறு வெம்மையளே!
மிகப் பழைய பாடல் என்றாலும், அர்த்தம் தெளிவாகப் புரியும் : என் காதலி வெயில் பொழுதில் எனக்குக் குளிர்ச்சி தருகிறாள், அதே காதலி பனியின்போது வெம்மை தருகிறாள்.
இப்போது, புலமைப்பித்தன் பாடலின் அடுத்த இரண்டு வரிகளை எடுத்துக்கொள்வோம்: காதலர்களின் கண்கள் நான்கும் பேசிக்கொள்ளும்போது, அவர்கள் இருவரும் ஊமை ஆகிவிடுகிறார்கள், அதாவது, வாய் இருந்தும், பேச முடிந்தும், அதனால் பயன் ஏதும் இல்லை.
இதற்கு இணையான திருக்குறள் வரிகள் எல்லாருக்கும் தெரியும்:
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பலனும் இல
நாலே வரி, முற்பாதியில் குறுந்தொகை, அடுத்த பாதியில் திருக்குறள், ஆனால் பாட்டைக் கேட்கிற யாருக்கும் இது வலிய ‘நுழைக்கப்பட்டிருப்பதாக’த் தெரியாது. இது புலமைப்பித்தனின் சாதுர்யம்மட்டுமல்ல, என்றைக்கும் பொருந்தக்கூடிய உவமைகளை, சிந்தனைகளை எழுதிக் குவித்த நம் முன்னோர்களின் பெருமையும்தான்!
***
என். சொக்கன் …
05 05 2013
155/365
rajnirams 12:16 pm on May 5, 2013 Permalink |
அருமை.இவை குறுந்தொகை வரிகளா? திருப்பம் படத்திலும் புலமைப்பித்தன் உன்னை நினைந்து பாடுவேன் பாடலில் “கோடையிலும் மார்கழி கொண்டு வரும் தேவி நீ”என்று எழுதியிருப்பார்.புதுக்கவிதையிலும் வைரமுத்து “நீயும் நானும் சேர்ந்தபோது கோடை கூட மார்கழி”என்று எழுதியிருப்பார். நன்றி.
Arun rajendran 1:29 pm on May 5, 2013 Permalink |
இந்த உவமைக்கு /உருவகம் ஒடனே நியாபகப்படுத்துற பாட்டுகள் (எல்லாம் மனப்பாட செய்யுள் போல உருப்போட்டப் பாட்டுகள் :-))
சிகப்பு ரோஜாக்கள் -> வாலி -> நினைவோ ஒரு பறவை ->பனிகாலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ
பூவெல்லாம் கேட்டுப் பார் ->பழனிபாரதி-> சேனொரிட்டா->முன்பு வெயில் காலத்தில் நான் நிழல் தேடினேன்
நண்றிகள் சொக்கன் சார்..
anonymous 5:30 pm on May 5, 2013 Permalink |
பாட்டில் வரும் கோடை/வாடை சொற்செட்டு அழகு!
கொண்டல் = கிழக்கில் வீசும் காற்று; கோடை = மேற்கு
தென்றல் = தெற்கு, வாடை = வடக்கு
கொண்டல், தென்றல் = இனிமையானவை; (மென் காற்று)
கோடை, வாடை = கடுமையானவை; (வெப்பம்/குளிர்)
சினிமாவில் நாலுமே வந்திருக்கா?
=”கோடைக்” காலக் காற்றே, குளிர்த் “தென்றல்” பாடும் பாட்டே
=ஆசையைக் காத்துல தூது விட்டு, ஆடிய பூவுல “வாடை” பட்டு,
=கொண்டல்?? அடடா, சரியாத் தெரியலையே:)
anonymous 6:36 pm on May 5, 2013 Permalink |
//கோடைக் காலங்களில், குளிர் காற்று நீயாகிறாய்,
வாடை நேரங்களில், ஒரு போர்வை நீயாக வந்தாய்//
இதே போல், புன்னகை மன்னன் படத்திலும் வரும்…
*புலமைப்பித்தன் பாட்டு = ஆண், பெண்ணுக்கு ஏங்கிப் பாடுவது
பெண்ணுக்கு மட்டும் ஏக்கம் இல்லீயா என்ன?
*புன்னகை மன்னன் பாட்டு = பெண், ஆணுக்கு ஏங்கிப் பாடுவது
“நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்”
(ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்; உன் கையில் என்னைக் கொடுத்தேன் -ன்னு வைரமுத்து எழுதிச், சித்ரா பாடுவாங்க)
—–
இப்படிக் குளிரும்/ வெப்பமும் ஒரே இடத்தில் இருக்க முடியுமா?
அதுக்கு நீங்க குடுத்த குறுந்தொகை தான் Top Class பாடல்;
வேனிலானே தண்ணியள்,
பனியே.. சிறு வெம்மையளே!
மோசிகீரனார் பாட்டுல அம்புட்டு உவமை அழகு!
அதனால் முழுப் பாட்டையும் சொல்ல, அனுமதி தாருங்கள்;
கோடைக் காலத்தில் = சில்லு-ன்னு சந்தன மரமாம்
குளிர்க் காலத்தில் = சூடான தாமரைப் பூவாம்; தாமரை எப்படிச் சூடு???
—–
anonymous 6:54 pm on May 5, 2013 Permalink |
(ரெண்டு ரென்டு வரியாத் தான் காபி உறிஞ்ச முடியும்)
***மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில்
சூருடை அடுக்கத்து..
=மக்கள் அதிகம் போகாத பொதிகை மலைக் காட்டுக்குள்ள
சூர் (துன்பம்) தீர்க்கும் முருகன் இருக்கும் காட்டுக்குள்ள…
***ஆரங் கடுப்ப, வேனிலானே தண்ணியள்;
=கோடைக் காலத்தில் (வேனில்), சந்தன மரம் போலச், “சில்ல்ல்ல்”-ன்னு இருக்குறாளே
(சந்தனம் குளிர்ச்சி தானே)
***பனியே வாங்கு கதிர் தொகுப்பக் கூம்பியை
=தாமரைப் பூ மெத்து-ன்னு இருக்கும், நீரில் இருப்பதால் சில்ல்ல்ல்-ன்னு தான் இருக்கும்
ஆனா, பனிக் காலத்தில், அவ தாமரை போலச் சூடா இருக்காளாம்! எப்படிய்யா இது???
——-
***அலங்கு வெயில் பொதிந்த தாமரை
உள்ளகத்து அன்ன சிறு வெம்மையளே
தாமரை, சூரியனுக்காகவே வாழுது;
பகல் முழுக்க, அவன் இளஞ் சூட்டைத் தன்னுள் தேக்கி வச்சிக்குது; மாலையில் கூம்பி விடுகிறது;
இப்போ இரவும் வந்துருச்சி; குளத்தில்… ஒரே குளிரு…
ஆனா தாமரைக்குள்??? = இளஞ் சூடு (சிறு வெம்மையளே)
Solar Charger போல, கூம்பிய தாமரை:))
நெறைய சூடு இல்ல; இளஞ் சூடு = “சிறு” வெம்மையளே!
இப்படிச் சந்தனமும், தாமரைச் சூடுமா = எனக்குக் குளிர்ச்சியும், வெப்பமும் குடுக்குறாளே…
பாட்டை, மறுகா, நீங்களே நேரடியா வாசிங்க….
*வாங்கு கதிர் தொகுப்பக் = Solar Charging
*கூம்பி, அலங்கு வெயில் பொதிந்த தாமரை
*தாமரை உள்ளகத்து அன்ன சிறு வெம்மையளே
——-
இதழ் ஈரம் = குளிர்ச்சி
அதுக்கும் கீழே எறங்கினாச் = சூடு:)
ச்ச்ச்சீ, இதுக்கு மேலச் சொல்ல வெக்கமா இருக்கு….
(காதலி உள்ளப் பேச்சு)
முருகா, “வெயில் பொதிந்த தாமரை”க்குள் நாம போயீறலாமா? அங்கேயே தூங்கிருவோம்… = “தாமரைக் கட்டில்”
என். சொக்கன் 9:08 am on May 6, 2013 Permalink |
Comment from Sushima (Sent Via Email)
நல்ல பதிவு. அன்பு என்பது வேண்டும் பொழுது குளிர் சாதனப் பெட்டியாகவும், கம்பிளிப் போர்வையாகவும் மாறுவது வாழ்வில் நிகழும் ஒன்று. அதைப பாடலில் அழகாக வடித்து இருப்பது கவிஞரின் சிறப்பு. இந்தத் திரைப்பாடலுக்கு உதாரணமாகக் குறுந்தொகையையும் திருக்குறளையும் நீங்கள் காட்டியிருப்பது உங்கள் சிறப்பைக் காட்டுகிறது 🙂
amas32
பழ. கந்தசாமி 11:28 am on May 28, 2013 Permalink |
வாவியுறை நீரும் வடநிழலும் பாவகமும்
ஏவனைய கண்ணார் இளமுலையும் – ஓவியமே
மென்சீத காலத்து வெம்மைதரும் வெம்மைதனில்
இன்பாரும் சீதளமா மே! – நீதிவெண்பா