”மா”வடு
கோடை வந்தாலே மாமரங்களில் மாம்பிஞ்சுகள் நிறைந்து தொங்கும். மாம்பிஞ்சு என்று சொல்வதை விட மாவடு என்ற பெயர்தான் இன்று பிரபலமாக இருக்கின்றது. மாவடு என்றதுமே இரண்டு திரைப்படப் பாடல்கள் நினைவுக்கு வரும்.
என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறச்சொல்லோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ
படம் – சிவகாசி
பாடல் – இயக்குனர் பேரரசு
இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், உதித் நாராயண்
பாடலின் சுட்டி – http://youtu.be/6XXhDTH2iMwமுத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
………………
மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
படம் – நெஞ்சில் ஒரு ஆலயம்
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – இராமமூர்த்தி
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
பாடலின் சுட்டி – http://youtu.be/t5zV9id2QP4
முதல் பாடல் கவித்துவமே இல்லாமல் இருந்தாலும் தயிர்ச்சோற்றுக்கு மாவடு மிகப்பொருத்தம் என்ற உண்மையைச் சொல்கிறது. இரண்டாவது பாடல் மிக இனிமையான பாடல். மாவடு வகிர்ந்தது போன்ற அழகான கண்கள் என்று உவமிக்கிறது.
சரி. நாம் தயிர்ச்சோற்றுக்கே போகலாம். ஊறுகாய்கள் எல்லாமே தயிர்ச்சோற்றுக்குப் பொருத்தமாக இருந்தாலும் நன்கு ஊறிய வடுமாங்காய் பலரால் விரும்பப்படுவதுதான் உண்மை.
இப்பொழுதெல்லாம் ஊறுகாய்களை கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வீட்டிலேயே செய்யப்படும் மாவடுவுக்கு இணை வேறெதுவும் இல்லை.
சென்னையில் மாவடு பார்த்துப் பொறுக்கி வாங்க வேண்டுமென்றால் மயிலைதான் சிறந்த இடம். வெறும் வடுமாங்காய்கள் மட்டுமல்ல, ஊறுகாய் செய்வதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் அங்கேயே வாங்கிவிடலாம். பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வடுமாங்காய் பிரபலமாக இருப்பது இன்று நேற்று நடப்பதல்ல. கடைச்சங்க காலத்திலேயே அப்படித்தான் இருந்திருக்கிறது.
கடைச்சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் தொகுக்கப்பட்ட ஒரு நூல் அந்தணர் வீடுகளில் வடுமாங்காய் பயன்பாட்டில் இருந்ததையும் செய்முறையையும் தெளிவாகக் குறிக்கிறது.
அந்த நூல்தான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படை.
மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின்
……………………………………….பைந்துணர்
நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின், வகைபடப் பெறுகுவிர்
நூல் – பெரும்பாணாற்றுப்படை
எழுதியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்
இந்த வரிகள் அந்தணர் வீடுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களைப் பட்டியல் இடுகின்றது. மாதுளங்காயை எப்படிப் பொரியல் செய்வது என்றும் இந்தப் பாடல் விளக்கும். ஆனாலும் நமக்குத் தேவையான மாவடு பற்றிய வரிகளின் பொருளை மட்டும் பார்க்கலாம்.
மறைகளை ஓதுகின்றவர்களின் வீடுகளில்
நெடிய மாமரங்களின் பசுங்கொத்துகளிலிருந்து
உதிர்க்கப்பட்ட மாவடுக்கள் காடியில் ஊறி
உண்பதற்கு சோற்றோடு வகைபடப் பெறுவீர்கள்
காடித்தண்ணீரில் மாவடு ஊற வைக்கப்பட்டு சோற்றோடு கலந்து உண்ணப்பட்டதாம். எப்போது? கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் முன்னர்.
ஆனால் அந்த முறையில்தான் இப்போதும் மாவடுக்கள் ஊறவைக்கப்படுகின்றனவா? இல்லை. இப்போதைய செய்முறையை எளிமையாச் சொல்கிறேன்.
வடுமாங்காய்களை காம்பு நீக்கி நீரில் அலசிக்கொள்ள வேண்டும். நன்கு கழுவப்பட்ட மாவடுக்களை நிழலில் உலர்த்திக்கொள்ள வேண்டும். சிறிதும் ஈரம் இருக்கக்கூடாது.
ஆமணக்கு எண்ணெய்யை (விளக்கெண்ணெய்) சிறிதளவு எடுத்துக்கொண்டு மாவடுகளின் மீது பரவலாகப் பரவும்படி கலந்துகொள்ள வேண்டும். சிறிதளவு விளக்கெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவு கூடினால் ”பின்விளைவுகள்” இருக்கும்.
இந்த மாவடுக்களோடு உப்பு, மிளகாய்த்தூள், கடுகுப்பொடி கலந்து பாத்திரத்தில் போட்டு துணியால் மூடி வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து காலையிலும் மாலையிலும் குலுக்கி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ஊறி ஊறி நீர் சேர்ந்து மாவடுக்கள் சுண்டிச் சுருங்கி சுவையாகிவிடும். அவ்வளவுதான் செய்முறை.
என்ன? மாவடு வாங்கப் போகின்றீர்களா? மாவடு ஊறியபின் எனக்கும் ஒரு பாட்டில் நிறைய கொடுங்கள்.
அன்புடன்,
ஜிரா
151/365
rajnirams 9:13 pm on May 1, 2013 Permalink |
ஆஹா,அருமை.மாவடுவின் பழமையையும்,செய்முறையையும் விளக்கி நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள்.பேரும் புகழும் படத்தில் கண்ணதாசன் பாடலிலும் மாவடு வரும்.தானே தனக்குள் ரசிக்க்கின்றாள் பாடலில் கர்ப்பமான மனைவியை பார்த்து பாடுவது,”காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே கால்கள் உதைத்திடும் நாதம்,பச்சை “மாவடுவை”தேடி போவதன் காரணம் மூன்று மாதம்”என்று. நன்றி.
rajnirams 9:16 pm on May 1, 2013 Permalink |
அருமை.மாவடுவின் பழமையையும்,செய்முறையையும் விளக்கி நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள்.பேரும் புகழும் படத்தில் கண்ணதாசன் பாடலிலும் மாவடு வரும்.தானே தனக்குள் ரசிக்க்கின்றாள் பாடலில் கர்ப்பமான மனைவியை பார்த்து பாடுவது,”காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே கால்கள் உதைத்திடும் நாதம்,பச்சை “மாவடுவை”தேடி போவதன் காரணம் மூன்று மாதம்”என்று. நன்றி.
GiRa ஜிரா 9:09 am on May 3, 2013 Permalink |
அடடா! என்ன அழகான பாட்டு. சரியாக எடுத்துச் சொன்னீர்கள். எனக்கும் தானே தனக்குள் ரசிக்கின்றாள் பாட்டு மிகவும் பிடிக்கும். கண்ணதாசன் கண்ணதாசன் தான் 🙂
amas32 6:26 am on May 2, 2013 Permalink |
/ கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் முன்னர் / அவ்வளவு பழமையான பாடலில் வருகிறதா? அதிசயம்! அதைத் தேடி எடுத்து இந்தப் பதிவில் போட்டு இருக்கிறீர்களே, நன்றி 🙂
நீங்கள் சமீபத்தில் வந்தப் பாடலையும் பழைய பாடலையும் ஒரே இடத்தில் போடும்போது பழைய பாடல்களின் அருமை தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
என்ன அருமையாக மாவடு செய்முறை எழுதியுள்ளீர்கள் 🙂
ரொம்ப நல்ல பதிவு ஜிரா 🙂
amas32
GiRa ஜிரா 9:11 am on May 3, 2013 Permalink |
ரெண்டாயிரமாண்டு பழைய மாவடு பாருங்க. இது மட்டுமல்ல ரெண்டாயிரமாண்டு சமையற் குறிப்புகளும் இருக்கு. சங்க இலக்கியம் அந்தக் காலத்து வாழ்வியலைக் காட்டும் கண்ணாடி. காற்றில் கோட்டை கட்டாம மக்கள் வாழ்வைப் பற்றி பாட்டு கட்டும்.
மாவடு ரெசிப்பு சரியா இருக்கா? எதாச்சும் கூட்டிக் கொறைச்சு சொல்லியிருந்தா அதையும் சொல்லிருங்க 🙂
anonymous 10:39 am on May 2, 2013 Permalink |
பாணாற்றுப்படை = அதிலிருந்தே மாவடு எடுத்துக் குடுத்தமை மிக்க சிறப்பு; நன்றி
அதே பாணாற்றுப்படையில் ஊறுகாய் “ஜா”டி பற்றியும் வரும்;
இந்தப் பதிவை வாசிக்கும் பெண்களுக்கு ஒரு மனமார்ந்த வேண்டுகோள்;
= ஊறுகாயை, Bottle-இல் அடைப்பது, அதைக் கொலை செய்வது போல்:)
= தயவு செய்து கல்சட்டி (அ) “ஜா”டியில் அடைத்து புண்ணியம் பெறுங்கள்:) அந்த வாசமே அலாதி!
——-
//பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வடுமாங்காய் பிரபலமாக இருப்பது//
வடு = முகத்தில் “வடு/தழும்பு” -ன்னு மட்டும் பொருளல்ல
வடு = “பிஞ்சு/ இளமை”
பல பிராமணர்களின் அழகிய வீட்டுச் சொல் இது;
அவா கல்யாணப் பத்திரிகை பார்த்து இருந்தாக் கண்டு புடுச்சிருவீக:)
“மேற்படி சுபமுஹூர்த்தத்தை நடத்திக் கொடுத்து ***வடுவை*** ஆசீர்வதித்து என்னையும் கௌரவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்”
இதில் வரும் வடு = சின்னப் பையன்:)
அதே போல் மா வடு = சின்ன மாங்காய்!
anonymous 10:51 am on May 2, 2013 Permalink |
மாவடு -வில், சில அக்ரஹாரங்களில், மஞ்சப்பொடி/கிழங்கு மஞ்சளும் சேர்ப்பாங்க; நல்லெண்ணெயோடு வாசம் தூக்கலா இருக்கும்:)
Homemade மாவடு ரொம்ப நாள் கெடாம இருக்கணுமா? = Just drop 1 or 2 ice cubes; It will be ever fresh (கேள்விப்பட்டது – self experience only – No suing allowed:))
ஆச்சாளுக்கு ஊறுகாயா ஆகாமல் ஆருக்கா(க)
காய்ச்சாய் வடு மாங்காய்?
-ன்னு காளமேகம், பெண்களைக் கேலி பண்ணி ஒரு பாட்டு எழுதி இருப்பாரு:))
anonymous 11:21 am on May 2, 2013 Permalink |
முக்கியமா ஒன்னு சொல்லணும் = சிவபெருமான் “மாவடு” கடிச்ச கதை
சிவபெருமான் ரொம்பக் கருணையே உருவானவரு;
அவர் கருணை = தனிப் பெரும் கருணை;
தேவன்/ அசுரன் பேதம் பாக்க மாட்டாரு; பல அசுரர்கள், சிவபெருமானை நோக்கியே தவம் இருப்பதைப் புராணக் கதைகளில் காணலாம்;
——
ஒரு ஊருல ஒரு அன்பர்; பேரு = தாயன்;
தெனமும், அரிசிச் சோறு – கீரை – மாவடு, சிவபெருமானுக்குக் குடுப்பாரு (நைவேத்தியம்)
பிராமணர் அல்லர்; வேளாளர்; அதனால் கோயில் ஐயரிடம் குடுத்து நிவேதனம் செய்யச் சொல்வது வழக்கம்;
(On a sidenote, not only thayir choRu, கீரைச் சோற்றுக்கும் = மாவடு செம Combination)
இந்த அன்பர், வறுமையில் வாடினாலும், இந்த “மாவடு நைவேத்தியம்” மட்டும் நிறுத்தவே இல்ல;
ஒரு நாள் புருசனும் பொண்டாட்டியும், கூலி வேலை முடிச்சிட்டு, கோயிலுக்குத் தூக்கிட்டுப் போறாங்க, சோற்றுக் கூடையை;
அப்போ, கூலி வேலைக் களைப்பினால், கால் தடுக்கி, கீழே விழுந்துடறாங்க…
மொத்த கீரைச் சோறும், மாவடுவும் = மண்ணுக்குள்:(((
—–
அய்யோ, “வீணாப் போயிருச்சே” -ன்னு ஒரு கலக்கம்;
வாழ்க்கையே வீணாப் போவது கண்ணுக்குத் தெரியாது; ஆனா கொண்டவன் மேல் வச்ச அன்பு வீணாப் போனா மட்டும்..??
தாயனார், நெல் அறுக்கும் தன் குறுங்கத்தி; அதைத் தன் கழுத்திலே வச்சி அறுக்கத் தொடங்கறாரு:(
வறுமை + வெறுமையில், வீணாப் போகும் போது தான், இந்த வலி புரியும்;
அப்போ, கடக் கடக் -ன்னு ஒரு சத்தம்;
= “மாவடு கடிக்கும் சத்தம்”
ஈசனுக்கு, முதன் முறையாக, தன் கையாலேயே செஞ்ச மண்சோறு+மாவடு நைவேத்தியம்;
அவர் கரத்தை, “வேணாம்டா” -ன்னு பற்றிக் கொள்ள,
“என் கிட்ட வந்துரு” -ன்னு, தன் மார்புறச் சேர்த்துக் கொண்ட சிவபெருமான்;
கடக், கடக் = மாவடு கடிக்கும் சத்தம், இன்னும் தெளிவாக் கேட்குது….
இவரே = அரிவாட்டாய நாயனார் திருவடிகளே சரணம்!
anonymous 11:28 am on May 2, 2013 Permalink |
பணம்/ காசு
உடல் சுகம்
ஊரில் பெத்த பேரு
வாழ்க்கையே போனாலும்…
அந்த “அன்பை” மட்டும் விடாது பிடித்துக் கொண்டு, ஒரு ஓரமாய் வாழும் வாழ்க்கை…
=இதெல்லாம் முடியுமா?
=”முடியும்” -ன்னு மனசுக்கு ஊங்கங் குடுப்பதே, இது போல் திருத்தொண்டர் கதை தான்
மதங்களைக் கடந்த ஈசன்
“மாவடு கடித்த ஈசன்” = மனவடு களைவான் ஈசன்!