சீமை
- படம்: பதினாறு வயதினிலே
- பாடல்: ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
- எழுதியவர்: கண்ணதாசன்
- இசை: இளையராஜா
- பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
- Link: http://www.youtube.com/watch?v=EXVPl2aLQbc
காக்கையில்லா சீமையிலே,
காட்டெருமை மேய்க்கையிலே,
பாட்டெடுத்துப் பாடிப்புட்டு,
ஓட்டமிட்ட சின்னப் பொண்ணு!
’சீமை’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
பொதுவாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை ‘சீமைத்துரை’ என்பது வழக்கம். ஆனால் வெளிநாடு என்பதுதான் ‘சீமை’க்கு உண்மையான பொருளா? ‘தென்பாண்டிச் சீமை’, ‘தென்மதுரைச் சீமை’, ‘சிவகங்கைச் சீமை’ என்று உள்நாட்டிலும் சீமைகள் உள்ளனவே.
‘சீமைக் கத்தரிக்காய்’ என்று ஒரு காய் உள்ளது, ‘சீமைப் பசு’ என்று ஒரு விலங்கு உள்ளது. அவையெல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகிறதா?
அப்படியானால், சீமை என்பதன் அர்த்தம் ‘வெளியூர்’ என்பதாக இருக்குமோ?
இலங்கை மலையகப் பாடல்களில் “நம்ம சீமை” என்ற பயன்பாட்டைப் பார்க்கிறோம். இதன் அர்த்தம் என்ன? வெளிநாட்டை எப்படி “நம்ம” என்ற அடைமொழியோடு குறிப்பிடமுடியும்?
இந்தக் கேள்விகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புரியும், ‘சீமை’ என்பது வெளிநாடு அல்ல, வெளியூர்கூட இல்லை, அது ஒரு பகுதி, அவ்வளவுதான், ஊர், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு என்பதுபோல, நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்.
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் ‘பழந்தமிழ் ஆட்சி’ என்று ஒரு நூல் எழுதியுள்ளார். இதில் அவர் நான்குவிதமான ‘சீமை’களைக் குறிப்பிடுகிறார்:
- நகரச் சீமை (City)
- இனச் சீமை (ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் பகுதி)
- தேயச் சீமை (Country)
- கூட்டுச் சீமை (“United” States Of Americaபோல, பல நாடுகள் / சீமைகள் கூடி ஒரே சீமையாக வாழ்வது, Federal State)
அது சரி, கண்ணதாசன் சொல்லும் ‘காக்கையில்லா சீமை’ நிஜமாகவே இந்த உலகத்தில் உள்ளதா? அல்லது ஆட்டுக்குட்டி முட்டையிட்டுக் கோழிக் குஞ்சு வந்ததுபோல் அதுவும் கற்பனையா?
***
என். சொக்கன் …
29 04 2013
149/365
anonymous 2:33 pm on April 29, 2013 Permalink |
சீமை = அழகான நாட்டுப்புற இலக்கியச் சொல்
சீர்மை -> சீமை ஆகும்!
எப்படிச், சேர்வை -> சேவை ஆகின்றதோ,
கண்ணின் பார்வை -> பாவை (eye pupil) ஆகின்றதோ,
அதே போல் சீர்மை = சீமை…
நல்ல வளம்/ பெருமை/ சிறப்போடு இருக்கும் ஊரு = சீர்மை;
அது உள் நாடோ/ வெளி நாடோ… எதுவாயினும் சீர்மையுள்ள ஊரு = சீமை!
anonymous 2:48 pm on April 29, 2013 Permalink |
சீர்மை = சீமை
என்பதை, அதே நூலில் பாவாணர் விளக்குவாரு;
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், தமிழுக்கு வந்து வாய்த்த ஒரு கலங்கரை விளக்கம்;
Media செல்வாக்கு அற்ற Pedia அவர்!
அவர் வாழ்ந்த காலத்தில், அவரை ரொம்பவே மட்டம் தட்டீட்டோம்; 80களில் மிகவும் நொந்து தான் மாண்டு போனார்;
ஆனால், இன்னிக்கி
மொழி இயல்/ வேர்ச்சொல் -ன்னு நடுக்கடலில் தத்தளித்தால்,
ஒடனே உதவிக்கு வரும் ஒரே கலங்கரை விளக்கம் = “பாவாணர்” அவர்களே!
—-
*தென்பாண்டிச் சீமையிலே, தேரோடும் வீதியிலே…
*அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே
வாக்கப்பட்ட சீமை,
கிழக்குச் சீமையிலே
-ன்னு சினிமாவில் தான் எத்தனை எத்தனை சீமைகள்!
தெக்கத்திக் காரவுகளுக்கெல்லாம் ஒரே பெருமை! = தெற்கைத் தான் சீமை -ன்னு அதிகமாச் சொல்லுறது;
தமிழ்நாட்டு வடபகுதி மாவட்டங்கள் (எங்கூரு திருவண்ணாமலை உட்பட) = சீமை -ன்னு யாரும் சொல்லுறதில்ல:)
திருநெல்வேலிச் சீமை, சிவகங்கைச் சீமை… ன்னு இப்பிடி எல்லாமே “தெற்கு” தான்;
“தெக்கு” வாழ்கிறது; “வடக்கு” தேய்கிறது:)
anonymous 3:07 pm on April 29, 2013 Permalink |
“சீமை”ச் சரக்கு = சீர்மையான சரக்கா? -ன்னு மட்டும் கேட்டுறாதீக:)
இராகவன் இட்ட “சரக்கு”ப் பதிவில் தான் அடைக்கலம் ஆகணும்;
சீமை (சீர்மை) = மருத நிலம்
வேளாண்மை + “வியாபாரம்” = இரண்டுமே கொழிக்கும் ஊர்;
“சீர்மை” புக்கார்-ன்னு தமிழ் இலக்கியம், இது போன்ற ஊர்களைக் காட்டும்!
இம்புட்டு ஏன்?
ஊரு பேரை வைச்சே = குறிஞ்சியா? முல்லையா? மருதமா? -ன்னு கூடச் சொல்லீறலாம்!
*பட்டி, பாடி, காடு -ன்னு முடிஞ்சா = முல்லை
(கோயில்பட்டி, தி.கல்லுப்பட்டி,
வேலப்பாடி, ஆர்க்காடு)
*கோடு, பாறை, கல் -ன்னு முடிஞ்சா = குறிஞ்சி
(திருச்செங்கோடு, வால்பாறை, திண்டுக்கல்)
*துறை, குளம், ஓடை, ஏரி, சீமை -ன்னு முடிஞ்சா = மருதம்
(காங்கேசன் துறை, பெரிய குளம், காரனோடை, நாங்குநேரி)
—–
முன்பு எப்பவோ இட்ட, “தமிழ் ஊர்-பேர் விகுதிகள்” ஞாபகத்துக்கு வருது;
http://madhavipanthal.blogspot.com/2012/06/tamiloor.html
amas32 8:25 pm on April 30, 2013 Permalink |
அனானி நல்ல விளக்கம் அளித்துள்ளார். இதுவரை சீமை என்றால் வெளிநாடு என்ற பொருளில் தான் நான் அறிந்திருக்கிறேன். என் தந்தை முதல் முறை லண்டன் போய்விட்டு வந்தவுடன் என் பாட்டி என்னிடம் எம்புள்ள சீமைக்குப் போயிட்டு வந்திருக்கிறான் என்று பெருமையாக சொன்னது இன்னும் நினைவில் உள்ளது 🙂
amas32
rajinirams 8:33 pm on April 29, 2013 Permalink |
நீங்கள் சொன்னது மாதிரி சீமை என்றால் பொதுவாக மேலைநாடு என்றே பொருள்.ஆப்பிளைக்கூட சீமை இலந்தை என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.ப்ரியாவில் “அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே என்ற சூப்பர் பாடல் உள்ளது.நன்றி.