சீவாத நொங்கே!
- படம்: சின்னக் கவுண்டர்
- பாடல்: சுட்டி சுட்டி
- எழுதியவர்: ஆர். வி. உதயகுமார்
- இசை: இளையராஜா
- பாடியவர்: மலேசியா வாசுதேவன்
- Link: https://www.youtube.com/watch?v=QrZKODUipuo
போனாப் போகட்டும் ஒரு பொம்பளையின்னு பாத்தா, நீ
ஊரை ஏய்க்கப் பார்ப்பதென்னடி!
வீணா வரிஞ்சு கட்டி வம்பிழுத்ததாலே, இப்ப
மாட்டிக்கிட்டு முழிப்பதென்னடி!
புதிய தமிழ்க் கலாசாரத்தில் வேட்டியும் புடைவையும் இரண்டாம் நிலை உடைகளாகிவிட்டபோதும்கூட, அவற்றோடு தொடர்புடைய ’வரிஞ்சு கட்டி’ என்ற சொற்றொடரை நாம் இப்போதும் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம், ‘ஏதாவது ஒரு வம்புன்னா வரிஞ்சு கட்டிகிட்டு வந்துடுவீங்களே!’
’வரிஞ்சு கட்டுதல்’ என்றால் என்ன அர்த்தம்?
முதலில், அது ‘வரிஞ்சு’ அல்ல, ‘வரிந்து’ என்று சொல்லவேண்டும். ‘ஐந்து’ என்கிற எண் பேச்சுவழக்கில் ‘அஞ்சு’ என்று போலியாக மாறுகிறதல்லவா, கிட்டத்தட்ட அதே ஃபார்முலாவின்படி ‘வரிந்து’ என்பது ‘வரிஞ்சு’ என மாறிவிடுகிறது.
தமிழில் ’வரிதல்’ என்றால், இறுக்கிக் கட்டுதல் என்று அர்த்தம், பொதுவாகப் போர் வீரர்களுடைய உடை அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை இது.
போருக்குச் செல்கிறவர்களுடைய ஆடைகள் தொளதொள என்று இருந்தால், கண்ட இடத்தில் மாட்டிக்கொள்ளும், அல்லது, எசகுபிசகான நேரத்தில் அவிழ்ந்துவிடும், அப்போது அவர்கள் மானம் காக்க வேட்டியைப் பிடிப்பார்களா, அல்லது வீரம் காக்க வில்லைப் பிடிப்பார்களா?
இந்தப் பிரச்னையைத் தவிர்ப்பதற்காகதான், போர் ஆடைகள் இறுகக் கட்டப்பட்டன. அதாவது, போருக்குச் செல்கிறவர்கள் ஆடைகளை வரிந்துகொண்டார்கள். சற்றே நீட்டி முழக்கிச் சொல்வதென்றால், வரிந்து கட்டிக்கொண்டார்கள்.
அதே பதத்தைதான் இன்றைக்கு நாம் பயன்படுத்துகிறோம், ‘வரிஞ்சு கட்டிகிட்டுச் சண்டைக்கு வர்றான்.’
இதில் இன்னொரு சுவாரஸ்யமான கோணமும் உண்டு.
முன்பெல்லாம் உழவர்கள் தங்களுடைய விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசாங்கத்துக்குச் செலுத்திவிடவேண்டும். ஆகவே, அறுவடை நடக்கும்போதே அரசுக்கு உரிய பகுதியை அவர்கள் தனியாக ஒரு சாக்கில் கட்டிக் கொடுத்துவிடுவார்கள்.
இந்த நேரத்தில், சாக்கின் நுனிப்பகுதி நன்றாக இறுகக் கட்டப்படும், அதாவது, வரிந்து கட்டப்படும். இதிலிருந்துதான் ‘வரி கட்டுதல்’ என்ற வார்த்தை வந்ததாகச் சொல்கிறார்கள். பின்னர் அது பல வடிவங்களை எடுத்து இப்போது நமக்கு ‘வருமான வரி’யாக நிற்கிறது.
இப்போதும், ’வரியே கூடாது சார்’ என்று வரிந்து கட்டுகிறவர்கள் உளர்.
***
என். சொக்கன் …
03 04 2013
123/365
rajinirams 12:52 pm on April 3, 2013 Permalink |
சூப்பர் சார்.ஜப்பானில் கல்யாண்ராமன் படத்தில் வேட்டி வரிஞ்சு கட்டு பாட்டை பொளந்து கட்டு என்று வரும்:-))
[μsic]மாபியா (@sicmafia) 12:59 pm on April 3, 2013 Permalink |
வேட்டியை வரிந்து கட்டுவதும், கச்சையை இறுக்கி கட்டுவதும் பாரம் சுமத்தல் போன்ற கடும் உடல் உழைப்புகளின் போதும், மல்யுத்தம் போன்ற விளையாட்டு போட்டிகளின் போதும் உடம்பை ‘பேலன்ஸ்’ செய்ய பெரிதும் உதவுகிறது
உடலின் நடுப்பகுதி நெகிழ்வில்லாமல் சிக்கென உறுதியாக இருக்க அதை இறுக்க வேண்டியது அவசியம் என்று ‘கோர் எக்ஸ்சர்சைஸ்’ செய்வது மட்டும் போதாது, தேவையான நேரத்தில் வரிஞ்சுகட்டவும் வேண்டும்
N Rajaram 2:19 pm on April 3, 2013 Permalink |
அட! வருமான வரி துறையில் இவ்வளவு வருடமா வேலை செஞ்சும் இது புதுசா இருக்கே!
amas32 (@amas32) 4:48 pm on April 3, 2013 Permalink |
வரிஞ்சு கட்டி என்றால் ஊருகுக்கு முன்னால் போய் சண்டை இடத் தயாராய் நிற்பது என்று நினைத்திருந்தேன். வயலில் வேலை செய்பவர்கள் தார்பாச்சு வைத்து உடுதியிருப்பார்கள். லூஸ் க்ளோதிங் அல்லாடாது. வேலை செய்ய ஏதுவாக இருக்கும்.
amas32
Mahesh Kumar 5:27 pm on April 3, 2013 Permalink |
ஆளானபின்னாலே அல்லிப்பூ மூடாது – (என் வீட்டுத்தோட்டத்தில் பாடல் – ஜெண்டில்மேன்) – இதற்கு விளக்கம் வருமா? நன்றி
என். சொக்கன் 9:08 pm on April 3, 2013 Permalink |
விளக்கம் நேரடியாகவே இருக்கிறதே 🙂 மலர்ந்தபின் பூ மீண்டும் மொட்டாகாது
Mahesh Kumar 10:03 am on April 4, 2013 Permalink
அப்படியா , நேரடிவிளக்கத்தைத்தான் மதுபாலா விளிக்கிறாரா அந்தப்பாடலில்?
என். சொக்கன் 10:33 am on April 4, 2013 Permalink
எழுதிய கவிஞரைக் கேட்கவேண்டிய கேள்வி 🙂
gan 8:08 pm on April 3, 2013 Permalink |
சீவாத நொங்கிற்கும், வரிந்து கட்டுவதற்கும் என்ன சம்பந்தம்?
என். சொக்கன் 9:08 pm on April 3, 2013 Permalink |
அந்தப் பாடலில் வரும் ஒரு ரசமான வரியைக் கட்டுரைக்குத் தலைப்பாக வைத்தேன், அவ்வளவே, மற்றபடி இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
பொன்.முத்துக்குமார் 12:12 am on April 4, 2013 Permalink |
எப்படி வரிந்து கட்டுவது என்று தெரியுமா ? 🙂
வேட்டியின் இரு முனைகளையும் மடித்து கட்டுவது போல மேலே கொண்டுவந்து அவற்றை இரண்டு கால்களுக்கு இடையே விட்டு பின்பக்கம் கொண்டுவந்து முதுகு புறத்தில் சொருகிக்கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட இறுக்கமான கால்சராய் போல ஆகிவிடும்.