ஆகுபெயர்
- படம்: ராஜாதிராஜா
- பாடல்: எங்கிட்ட மோதாதே
- எழுதியவர்: பொன்னடியான்
- இசை: இளையராஜா
- பாடியவர்கள்: மனோ, கே. எஸ். சித்ரா
- Link: http://www.youtube.com/watch?v=f7hoMEG9SXU
சுண்டல் பயறை ஊற வெச்சு, காலையிலே தின்றுவிட்டு,
தண்டால் எடு, குண்டால் எடு, பஸ்கி எடு, குஸ்தி போடு,
வேட்டி எடுத்து, வரிஞ்சு கட்டி, மீசையத்தான் முறுக்கி முறுக்கி,
சிலம்பை எடுத்துச் சுழற்று சுழற்று, ஆம்பளையா வளரு வளரு!
நேற்று வீட்டில் பச்சைப் பட்டாணி சுண்டல் செய்திருந்தார்கள். பொறியலுக்கும் சுண்டலுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசித்தபடி சாப்பிட்டேன்.
பத்தாங்கிளாஸ் இலக்கணப் புத்தகத்தில் ‘ஆகுபெயர்’ என்று ஒரு பாடம் இருந்தது. அதாவது, ஒன்றின் பெயர் இன்னொன்றுக்கு ஆகிவருவது.
இதற்குப் பிரபலமான உதாரணம், ‘ஊர் சிரித்தது’. உண்மையில் சிரித்தது ஊர் அல்ல, அதில் உள்ள மக்கள், ஆனால் அது ஊரே சிரித்ததாகச் சொல்லப்படும்.
இதேபோல், ‘ரோஜா பயிரிட்டிருக்கிறேன்’ என்று ஒருவர் சொன்னால், அவர் மண்ணில் ரோஜாவை விதைத்துள்ளார் என்று அர்த்தம் இல்லை, அவர் செடியைப் பயிரிட்டுள்ளார், அதில் பூக்கும் ரோஜாப்பூ அந்தச் செடிக்கே பெயராக ஆகிவருகிறது.
ஆகுபெயர்களில் பல வகைகள் உண்டு. சினையாகுபெயர், இடவாகுபெயர், பண்பாகுபெயர் என்று அது ஒரு பெரிய லிஸ்ட்.
அந்தப் பட்டியலில் ஒரு வகை, தொழிலாகுபெயர். ஒரு தொழில் அதனால் உருவாகும் பொருளுக்குப் பெயராக மாறுவது.
உதாரணமாக, ‘சுண்டல்’ என்ற வார்த்தையையே எடுத்துக்கொள்வோம், அது பெயர்ச்சொல் (Noun) அல்ல, வினைச்சொல் (Verb), இதன் அர்த்தம், ஒரு பொருளை நீர் வற்றும்படி சுருக்குவது, ‘பாலைச் சுண்டக் காய்ச்சினான்’ என்று சொல்கிறோம் அல்லவா, அதுதான் இது.
ஆக, பச்சைப் பட்டாணியைச் சூடாக்கி நீரை வற்றவைத்துச் சுண்டச் செய்வது என்ற தொழில், அதனால் கிடைக்கும் உணவுப்பொருளுக்கே பெயராகிவிட்டது. ’சுண்டல்’ என்பது தொழிலாகுபெயர்.
சுண்டல்மட்டுமில்லை, வறுவல், பொரியல், அவியல், மசியல், துவையல், பொங்கல் எல்லாமே Verbகள்தாம். அதனால் கிடைக்கும் உணவுப்பொருள்களுக்கும் அதே பெயரைச் சூட்டிவிட்டோம்!
அடுத்தமுறை யாராவது ‘கடலைச் சுண்டல் செய்தேன்’ என்று சொன்னால், ‘கடலையே வற்றவைத்தாயா? நீ என்ன பெரிய அகத்தியரா?’ என்று கேட்டுவிடுங்கள் :>)
***
என். சொக்கன் …
14 03 2013
103/365
tcsprasan 11:57 am on March 14, 2013 Permalink |
Nice. ஆனா பொறியலா? பொரியலா?
என். சொக்கன் 12:08 pm on March 14, 2013 Permalink |
என்னுடைய பிழைதான், அது பொரியல் என்று இருக்கவேண்டும். சரி செய்துவிட்டேன்
gokulraj 11:59 am on March 14, 2013 Permalink |
பொறியல், பொரியல் என்ன வித்தியாசம் !!
என். சொக்கன் 12:08 pm on March 14, 2013 Permalink |
என்னுடைய பிழைதான், அது பொரியல் என்று இருக்கவேண்டும். சரி செய்துவிட்டேன்
என். சொக்கன் 12:10 pm on March 14, 2013 Permalink |
உருளைக்கிழங்கை ருசியாகப் பொரித்துத் தந்தார் அவர், அதைச் சாப்பிட்டபின், அந்தச் சுவையில் லயித்து, ’ஐயா, உங்கள் பெயரைத் தஞ்சாவூர் கல்வெட்டில் பொறித்துவைக்கலாம்’ என்று பாராட்டினேன்
Saba-Thambi 6:32 pm on March 15, 2013 Permalink
நல்ல வியாக்கியாணம். அருமை!
amas32 (@amas32) 8:33 pm on March 14, 2013 Permalink |
சுண்டாட்டம் என்று புதிய திரைப்படம் வெளிவந்துள்ளது. (கேரம் போர்ட் ஆட்டம்) பெயரே என்னை ஈர்த்தது. சுண்டி விளையாடுவதால் சுண்டாட்டம். இங்கே நீங்கள் குறிப்பிட்டிருப்பது சுண்ட வைத்து செய்யும் சுண்டல் பற்றி.
எங்கிட்டே மோதாதே என்ற பாடலை எழுதியவர் பொன்னடியான் என்று பார்க்க சிறிது ஆச்சர்யமாக உள்ளது. அவர் இறைவன் மேல் ஏதாவது பாடல் எழுதுபவரோ என்று தான் முதலில் தோன்றியது 🙂
amas32
GiRa ஜிரா 9:46 am on March 15, 2013 Permalink |
தொழிலாகுபெயர். மிக அழகான விளக்கம்.
எல்லாம் போட்டுக் குழம்புவதால் குழம்பு. ஊறுகின்ற காயாதலாம் ஊறுகாய். வதக்கப்படுவதால் வதக்கல். நீர் வற்றிப் போவதால் வற்றல். வறுக்கப்படுவதால் வறுவல். சாப்பிட்டிலும் தமிழ் விளையாடுகிறது.
anonymous 6:41 pm on March 15, 2013 Permalink |
“சுண்டுதல்” என்னும் வினையை மறைத்து (அணைத்து), பெயர்ச்சொல்லாகவே காட்டி விடுவதால்.. இது “வினையால் அணையும் பெயர்” அல்லவா?;)
anonymous 6:58 pm on March 15, 2013 Permalink |
வினையாலணையும் பெயர் அல்ல;)
சொக்கன் சொன்ன ஆகுபெயர் என்பதே சரி; ஏன்?
வினையாலணையும்பெயர் காலம் காட்டும்; ஆகுபெயர் காட்டாது;
*படித்தவன் – வினையால் அணையும் பெயர்; முன்பே படித்தவன் என்ற இறந்த காலம் காட்டும்;
*படிப்பு – ஆகுபெயர், படிப்பதால் படிப்பு, காலம் காட்டாது;
வடுப்பதால் = வடை
தோய்ப்பதால் = தோசை
இடுவதால் = இட்டிலி;)
சுண்டுவதால் = சுண்டல்
Just a thought on difference between the two-வினையால் அணையும் பெயர் & ஆகுபெயர்.
anonymous 8:35 pm on March 15, 2013 Permalink |
“சுண்டுவதால்” = சுண்டல் –ன்னா,
“ஆகுவதால்” = ஆகுபெயர்
அட, “ஆகு பெயர்” என்பதே ஒரு ஆகுபெயரா?:)
என்னே தமிழின் விளையாட்டு:)
—–
Wait, Wait, அவசரப்பட்டு எறங்கீறக் கூடாது..
ஆகு பெயர் is actually வினைத் தொகை!
(ஆன பெயர், ஆகின்ற பெயர், ஆகும் பெயர்)
சுண்டல் போலவே, “ஆகல்”-ன்னு பேரு வச்சிருந்தா, அப்போ (தொழில்) ஆகுபெயர்
ஆனா, இங்கு “ஆகு” என்பதன் பின்னாடி “பெயர்” –ன்னு இன்னோரு பெயரைச் சேர்த்து விட்டதால், இது ஆகுபெயர் ஆகாது;
இனிய-நுண்ணிய வேறுபாடுகள்
1. காலம் காட்டாமல் ஆகி வந்தால் = தொழில்-ஆகுபெயர் (படிப்பு)
2. காலம் காட்டினால் = வினையால் அணையும் பெயர் (படித்தவன்)
3. மூன்று காலமும், காட்டாமல் காட்டினால் = வினைத் தொகை (படி குழாம்)
—–
படித்தல் = ஒரே வினை தான்…
ஆனா, வேறு வேறு சூழல்களில் எப்படி மாறுது பாருங்க!
ஒரே இறைவன் தான்…
வேறு வேறு சூழல் கொள்வது போல்… = திருமால்/ முருகன்/ அல்லா/ சிவபெருமான்…
படிப்பு –ன்னு பேரு கொண்டால் = தொழிலாகு பெயர்
படித்த-வன் ன்னு பேரு கொண்டால் = வினையாலணையும் பெயர்
திருமால்-ன்னு பேரு கொண்டால் = முல்லை, காத்தல் (miss u)
முருகன்-ன்னு பேரு கொண்டால் = குறிஞ்சி, புணர்தல் (love u)
இதுவே தமிழ் தரும் பாடம்!
anonymous 8:39 pm on March 15, 2013 Permalink |
Movie என்பதே ஆகுபெயர் தான் (Move ஆவதால்:))
தமிழ்ச் சினிமாவை வச்சிக்கிட்டே மொத்த இலக்கணமும் சொல்லிக் குடுத்துறலாம்:))
*(படிக்காதவன்) = வினையால் அணையும் பெயர்
*பட்டப் (படிப்பு) = தொழிலாகு பெயர்
*(படிக்காத) மேதை = பெயரெச்சம் (எச்ச வினை)
*(படித்தால்) மட்டும் போதுமா = வினையெச்சம் (ஐய வினை – எதிர்காலம்)
வாழ்க (நல்ல) தமிழ்ச் சினிமா!
வாழ்க திரைத்தமிழ் இலக்கியம்