குற்றால நிலவு
- படம்: உலகம் சுற்றும் வாலிபன்
- பாடல்: நிலவு ஒரு பெண்ணாகி
- எழுதியவர்: வாலி
- இசை: எம். எஸ். விஸ்வநாதன்
- பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
- Link: http://www.youtube.com/watch?v=drcBFuf2y8U
புருவம் ஒரு வில்லாக, பார்வை ஒரு கணையாக,
பருவம் ஒரு தளமாக, போர் தொடுக்கப் பிறந்தவளோ!
குறுநகையின் வண்ணத்தில், குழி விழுந்த கன்னத்தில்,
தேன் சுவையைத்தான் குழைத்து, கொடுத்ததெல்லாம் இவள்தானோ!
பெண்களின் வளைந்த புருவத்தை வில்லுக்கு ஒப்பிடுவது பழைய மரபு. அந்த வில்லில் எய்யப்படுகிற அம்பாக அவர்களுடைய விழிகளை வர்ணித்து, அதன்மூலம் ஆண்கள்மீது பெண்கள் போர் தொடுப்பதாகக் கற்பனை செய்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. செய்தவர் திரிகூட ராசப்பக் கவிராயர்.
உலகம் சுற்றும் வாலிபன், குற்றாலத்துக்கு வரமாட்டானா என்ன? திரிகூட ராசப்பக் கவிராயரின் அந்தக் கற்பனையை மிக அழகான இந்த வர்ணனைப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் வாலி.
பால் ஏறும் விடையில் வரும் திரிகூடப்பெருமானார் பவனி காணக்
கால் ஏறும் காமனுக்காக் கை ஏறும் படைப் பவுஞ்சாய்க் கன்னிமார்கள்
சேல் ஏறும் கலக விழிக் கணை தீட்டிப், புருவ நெடும் சிலைகள் கோட்டி,
மால் ஏறப் பொருதும் என்று மணிச் சிலம்பு முரசு அறைய வருகின்றாரே!
’பால் ஏறும் விடை’ என்றால், பால் போன்ற வெள்ளை வண்ணத்தைக் கொண்ட எருது, அதன்மீது ஏறிப் பவனி வருகிறார் திரிகூடப் பெருமான், அதாவது, சிவன்.
அவருடைய பவனியை வேடிக்கை பார்க்கப் பல பெண்கள் வருகிறார்கள். அவர்களெல்லாம் யார் தெரியுமா?
’கால் ஏறும் காமன்’, அதாவது காற்றில் பறந்து வரும் மன்மதன், அவனுடைய படையில் உள்ள வீராங்கனைகள்தான் இந்தப் பெண்கள்.
வெறும் வீராங்கனைகள்மட்டும் போதுமா? சண்டை போட ஆயுதம் வேண்டாமா?
ஆயுதம் இல்லாமலா? மீன் போன்ற அவர்களுடைய விழிகள்தான் அம்புகள், அவற்றால் ஒரு பார்வை பார்த்தால் போதும், உலகம் கலகமாகிவிடும்!
அப்படிப்பட்ட அம்பை நன்கு தீட்டி, புருவம் என்கிற நீண்ட வில்களில் பொருத்தி எய்யத் தயாராகிறார்கள் அந்தப் பெண்கள். அந்த அம்பால் தாக்கப்பட்ட ஆண்கள், உடனே மயங்கி விழவேண்டியதுதான்.
வீராங்கனைகள் ரெடி, ஆயுதமும் ரெடி, போர் அறிவிக்க முரசு வேண்டாமா?
அதுவும் உண்டு. அவர்களுடைய கால்களில் உள்ள மணிச் சிலம்புகளின் சத்தம்தான், மன்மத யுத்தம் தொடங்கப்போவதற்கான அறிவிப்பு.
இனி, ஆண்கள் கதி என்னாகும்?
***
என். சொக்கன் …
09 03 2013
098/365
GiRa ஜிரா 9:51 am on March 10, 2013 Permalink |
இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ….
கண்ணையும் புருவத்தையும் வெச்சே கவிஞர்கள் ஆயிரம் பாட்டு எழுதுவாங்க போல. அப்பப்பா.. கண்ணாலே வலை விரிச்சான்.. கண்களும் கவிபாடுதே.. கண்விழி என்பது கட்டளையிட்டது.. கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே…
பாரதியார் கூட வேலை ஒதுக்கிவிட்டு வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா ஆங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது வேலவா என்று எழுதியிருக்கிறார்.
குற்றாலக் குறவஞ்சி பாடல் மிகமிக அழகு.
இதே போல அருணகிரியும் ஒரு பாட்டு எழுதியிருக்காரு
சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்து வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டழிந்தது இங்கென் தலைமேல் அயன் கையெழுத்தே
அது சரி… பால் ஏறும் கால் ஏறும் சேல் ஏறும்னு எல்லாத்துக்கும் விளக்கம் சொன்ன நீங்க… மால் ஏறப் பொருதுங்குறதுக்கு விளக்கம் சொன்னா இன்னும் கொஞ்சம் ரசிச்சுக்குவேன் 🙂
என். சொக்கன் 10:02 am on March 10, 2013 Permalink |
மால் ஏறப் பொருத, மயக்கம் ஏற்படும்படி போர் செய்த 🙂
N Rajaram 3:46 pm on March 11, 2013 Permalink |
“புருவம் என்கிற நீண்ட அம்புகளில் பொருத்தி” – புருவம் என்னும் நீண்ட விற்களில்’ என்றல்லவா இருக்க வேண்டும்?
என். சொக்கன் 4:41 pm on March 11, 2013 Permalink |
Sorry, my mistake. Corrected now
N Rajaram 12:56 pm on March 12, 2013 Permalink
விற்கள் – வில்கள்
thanks for correcting my mistake too 😉
இலவச கொத்தனாரின் புத்தகத்தை இன்னும் முழுமையாக படிக்கவில்லை 😉
என். சொக்கன் 12:57 pm on March 12, 2013 Permalink
நீங்கள் எழுதியதில் Mistake எதுவும் இல்லைங்க, வில்கள், விற்கள் ரெண்டு கட்சியும் உண்டு, நான் முதல் கட்சி, அவ்ளோதான்!