சொல் சொல் சொல்
திரைப்பாடல்கள் உருவாகும் விதம் நம்மை வியக்க வைக்கும். மெட்டுக்கு பாட்டு, மீட்டருக்கு மேட்டர் என்பதுதான் பொது விதி. மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு என்பது விதிவிலக்கு . முதலில் இசைதான்.
ஆனால் ஒரு பாடலின் முழு வடிவம் என்பது Black Box Solution போல் அவ்வளவு சுலபமில்லை. இசையமைப்பாளரும் கவிஞரும் சேர்ந்து அங்கங்கே சில பல நகாசு வேலை செய்து அழகு சேர்த்தே முழு பாடல் கிடைக்கும். இந்த அலங்காரத்தை கவிஞரோ இசையமைத்தவரோ யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
மெட்டமைக்கும்போது dummy வார்த்தைகள் போட்டு விட்டு பின்னர் கவிஞர் மாற்றுவதும் நடக்கும். நீதி படத்தில் வரும் பாடல் ஒன்று. MSV ‘இன்று முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்’ என்று வைத்த வரிகளை தொடர்ந்து கண்ணதாசன் பாடல் எழுதி முடித்துவிட்டு, முதல் வரியை ‘நாளை முதல்’ என்று மாற்றினார் என்று படித்திருக்கிறேன்.
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ பாடலில் ‘செந்தாமரை இரு கண்ணானதோ’ என்ற வரியில் செந்தா….மரை என்று வார்த்தையை பூ மலர்வது போல் விரித்து அழகு செய்தது இசை. இதுபோல் இசை ஒரு பாடலின் வரிகளில் என்னவெல்லாம் செய்ய முடியும்?
வாழ்க்கை படகு என்ற படத்தில் வரும் ‘ஆயிரம் பெண்மை மலரட்டுமே’ என்ற http://www.inbaminge.com/t/v/Vazhkai%20Padagu/Ayiram%20Penmai%20Malarattume.eng.html
பாடலில்
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்.. தோழி சொல் சொல் சொல்
அந்த சொல் என்ற வார்த்தையை மூன்று முறை – இல்லை ஆறு முறை பாட வைத்து வாக்கியத்திற்கு ஒரு Force கொடுக்கிறது இசை. இது சரணத்திலும் தொடர்கிறது.
இன்னொரு பாடல். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் வரும் ஒரு எவர்க்ரீன் பாடல் http://www.inbaminge.com/t/n/Nenjil%20Oor%20Aalayam/Sonnathu%20Nethana.eng.html
சொன்னது நீதானா,
சொல், சொல், சொல் என்னுயிரே .
என்ற வரிகளில் வரும் சொல் , வலியுடன் வேதனையுடன் வெளிப்படும் ஒரு ஆதங்கத்தை உள்வாங்கி எதிரொலிக்கிறது.
மூன்றாவது கலங்கரை விளக்கம் என்ற படத்தில் வரும் பொன்னெழில் பூத்தது புதுவானில் என்ற பாடல். http://www.inbaminge.com/t/k/Kalangarai%20Vilakkam/Ponnezil%20Poothathu.eng.html
இதில் ஒரு வரி
என் மனத் தோட்டத்து வண்ணப்பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்.
இதில் வரும் சொல் சொல், தேடலின் துடிப்பை பிரதிபலிக்கும்.
இது பாடலில் முதலில் எழுதப்பட்டதா ? அல்லது பாடல் உருவாகும்போது செய்த மாற்றமா ? தெரியாது.முதல் இரண்டு கண்ணதாசன் எழுதிய பாடல்கள் மூன்றாவது பஞ்சு அருணாசலம் எழுதியது. மூன்றுக்கும் இசை MSV அதனால் கண்டிப்பாக இசையமைத்தவரின் பங்கு கணிசமானது என்றே தோன்றுகிறது.
கொசுறாக ஒரு உதாரணம். கண்மணி ராஜா என்ற படத்தில் ‘ஓடம் கடலோடும் என்ற பாடலில் வரும் வரிகள். பாடலில் SPB இணையும் இடம்
ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோஅது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்
ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்
இப்போது இந்த பாடலை கேளுங்கள். http://www.inbaminge.com/t/k/Kanmani%20Raja/Odam%20Kadalodum.eng.html
Subtle மியூசிக் மாற்றம் இருந்தும் ஒரே வரியை உபயோகித்து பாடல் அமைத்து பின்னர் வரிகளிலும் சிறு மாற்றம் செய்தது போல் இருக்கிறது. என்ன நடந்திருக்கும்? கவிஞர் ஒரு வரியை எழுதிக்கொடுத்து MSV பல விதமாக இசையமைததாரா ? அல்லது மெல்லிசை மன்னர் போட்ட மெட்டுக்கு இவர் ஒரே வரியை எழுதினாரா ? புரியாத புதிர்
மோகன கிருஷ்ணன்
084/365
Gopi Krishnan 2:03 pm on February 23, 2013 Permalink |
இது “போங்கு” ஆட்டம் !!!!
இளையராஜாவின் “நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே” இந்த
லிஸ்டில் இடம் பெறாதது மன்னிக்க முடியாத குற்றம் !!!!!
amas32 (@amas32) 2:56 pm on February 23, 2013 Permalink |
இந்த மாதிரி கேள்விகளைத் தான் இசையமைப்பாளர்களையும் பாடலாசிரியர்களையும் கேள்வி பதில் பகுதியில் கேட்கவேண்டும். எப்படி அவர்களுக்கு அந்த இன்ஸ்பிரேஷன் வருகிறது (அ) வந்தது என்று. இயக்குனர் பங்கும் இதில் இருக்கும் என்று நினைக்கிறேன். மக்கள் திலகம் எப்பொழுதும் இசையைமைக்கும் பொழுது ரிகார்டிங் ஸ்டூடியோவில் இருப்பார் என்று சொல்லக் கேள்வி. அவருக்கும் நல்ல இசை ஞானம் இருந்ததால் அவரும் பல கருத்துக்களைக் கொடுத்திருப்பார். ஏன் சில சமயம் பாடகர் கூட சில மாற்றங்களைச் சொல்லியிருக்கலாம். ஒவ்வொரு பாடலும் ஒரு கல்யாண சாப்பாடு தான்!
amas32
rajinirams 5:46 pm on February 23, 2013 Permalink |
அருமையான பதிவு,கவிஞர்களின் அழுத்ததை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.
இதே போன்று பலே பாண்டியாவில் நான் என்ன சொல்லிவிட்டேன் பாடலில் “என்ன என்ன என்ன”என்று பாடுவது நினைவிற்கு வருகிறது.குடும்ப தலைவனில் முதல் இரண்டு வரிகள்-ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும் :-))
GiRa ஜிரா 9:52 am on February 26, 2013 Permalink |
மிக அருமையான பதிவு.
பலருக்குத் தெரிந்த பலருக்குத் தெரியாத ஒரு ரகசியம் சொல்றேன்.
மெல்லிசை மன்னர் கொண்டு வந்த பலபுதுமைகளில் ஒரு புதுமையைப் பத்திச் சொல்லப் போறேன். கவனமாக் குறிச்சுக்கோங்க. எடுத்துக்காட்டோட தொடங்கி கருத்தில் முடிக்கிறேன்.
பொதுவா டூயட் பாடலில் ஒரு பல்லவியை ஆணும் பெண்ணும் பாடுவார்கள். இரண்டும் ஒரே மாதிரி வரிகளாக இருக்கும். மெட்டும் ஒரே மாதிரி இருக்கும்.
”ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசை கொண்டான்” என்ற வரியை பாடகரும் பாடகியும் ஒரே மெட்டில் பாடுவார்கள்.
ஆனால் பல பாடல்களில் மெல்லிசை மன்னர் அப்படிச் செய்திருக்க மாட்டார். ஒரே மீட்டர்தான். ஆனால் ஆண் பாடும் மெட்டு ஒரு மாதிரியும் பெண் பாடும் மெட்டு இன்னொரு மாதிரியும் இருக்கும்.
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து என்று ஒரு டூயட் பாடல். இதில் வரிகள் ஒன்றுதான். ஆனால் ஏசுதாஸ் பாடும் மெட்டும் வாணி ஜெயராம் பாடும் மெட்டும் வெவ்வேறாக இருக்கும்.
கிட்டத்தட்ட இரண்டு பாடல்களை ஒரே பாட்டுக்குள் அடக்கிய முயற்சி அது. இன்னொரு மெட்டை இன்னொரு பாட்டாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்றெல்லாம் யோசிக்காமல் பல பாடல்களுக்கு இப்படிச் செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர். இந்தப் புதுமையைப் பின்னால் பல இசையமைப்பாளர்கள் பின்பற்றினார்கள்.
கண்மணி ராஜா படத்தில் வரும் ஏதோ அது ஏதோவும் அப்படித்தான். ஒரே வரிதான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவிதமாக ஒலிக்கும்.
ஓடம் கடலோடும் பாடல் எனக்கு மிகமிகப் பிடித்த பாடல்.
Mohanakrishnan 9:12 pm on February 26, 2013 Permalink |
ரொம்ப சரி. அருமையான உதாரணம். நீரோடும் வைகையிலே பாடலின் துவக்கத்திலேயே TMS – சுசீலா இருவரும் இணைந்து பாடியது, மலர்களைப்போல் தங்கை பாடலில் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் என்ற மூன்றாவது வரியை முதல் வரி போல அமைத்தது. பூமாலையில் ஓர் மல்லிகை பாடலில் TMS பாடும்போது ஒரு தாளமும் தொடர்ந்து சுசீலா பாடும்போது வேறு தாளமும் – இன்னும் இன்னும் MSV பற்றி பேச நிறைய உண்டு