அழகன் ஆலயங்கள்
ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக இப்படிக் கேட்டார்.
“முருகனைக் கும்புடுறிங்களே. ஆறுபடை வீடுகளுக்கும் போயிருக்கிங்களா?”
“ஆகா! போகாமலா? நல்லா போயிருக்கேனே.”
“நீங்க போயிருப்பீங்க. இந்த ஆறுபடை வீடுகள் மட்டுந்தான் தமிழ்நாட்டுல முருகன் கோயில்களா? வேற கோயில்கள் எதுவும் இருக்கா? 108 வைணவத்தலங்கள்னு சொல்றாங்க. ஆனா தமிழ்க்கடவுள்னு சொல்ற முருகனுக்கு ஆறு கோயில்தானா?”
இவருக்கு எப்படி விளக்குவது என்று ஒரு நிமிடம் யோசித்தேன். சங்க இலக்கியங்களில் அதற்குப் பிந்தைய காப்பியங்களில் எல்லாம் இருக்கும் கோயில்களை எடுத்துச் சொன்னால் அடுத்த முறை என்னோடு பேசாமல் போனாலும் போய்விடுவார் என்று புரிந்தது.
எப்போதும் துணைவரும் சினிமா இப்போது துணைவனாக வந்தது.
ஆம். தேவரின் துணைவன் என்ற திரைப்படத்தில் ஒரு அழகான பாடல். அந்தப் பாடலில் தமிழகத்திலுள்ள மிகப்பிரபலமான முருகன் கோயில்களை எல்லாம் பட்டியல் போடுவார்கள். கணவனும் மனைவியும் கோயில் கோயிலாகச் சென்று முருகனை வழிபட்டு பிள்ளையின் உடல்நலம் சரியாக வேண்டுவது போல காட்சியமைப்பு.
திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் மருதகாசியும் கண்ணதாசனும் பாதிப்பாதி பாடலை எழுதிக் கொடுக்க டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் உள்ளம் உருகப் பாடிய பாடல் இது.
அந்தப் பாட்டின் மொத்த வரிகளையும் கொடுக்கிறேன். ஆறுபடை வீடுகளையும் சேர்த்து மொத்தம் எத்தனை கோயில்கள் என்று பாருங்கள். இவை மிகப்பிரபலாமன கோயில்கள். இவை போக இன்னும் எத்தனையெத்தனையோ கோயில்கள் ஊரெங்கும் உண்டு. அதை விட அடியவர் உள்ளங்களில் அவன் கொண்டுள்ள கோயில்கள் இன்னும் நிறைய.
மருதகாசி எழுதிய வரிகள்
மருதமலை மீதிலே குடி கொண்டிருப்பவனே
மனதார நினைப்பவர்கள் எண்ணியதை முடிப்பவனே
வாயாறத் துதிப்பவர்கள் கேட்டதைக் கொடுப்பவனே
வந்தவர்க்கு அருள் புரியும் மருதமலை ஆண்டவனேமருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே
மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே
பிள்ளை முகம் பாரு முருகா
பிறவிப் பிணி தீரு
பிள்ளை முகம் பாரு முருகா
பிறவிப் பிணி தீரு
மருத மலையானே நாங்கள் வணங்கும் பெருமானேஉன்னை ஒருபோதும் எண்ண மறவேனே
சென்னிமலை வாழும் பெருமானே
அன்னை தந்தையுடன் உன்னை சிவன்மலையில்
வந்து தொழுவோர்க்கு அருள்வோனே
வள்ளல் உனை நாடி வள்ளிமலை தேடி
வருவோர்க்கு இன்பம் தருவோனே
கள்ளம் அறியாத பிள்ளைப் பெருமானே
காங்கேய நல்லூர் வளர்வோனேதிருமுருகன் பூண்டியில் பரமனருள் வேண்டியே
சிவலிங்கம் தனை வைத்துப் பூஜித்த குமரா
தென்தேரிமலை கண்டு நெஞ்சாரத் துதிப்போர்க்கு
அஞ்சாதே ! என அபயம் தருகின்ற அமரா
திருமுருகன் பூண்டியில் பரமனருள் வேண்டியே
சிவலிங்கம் தனை வைத்துப் பூஜித்த குமரா
தென்தேரிமலை கண்டு நெஞ்சாரத் துதிப்போர்க்கு
அஞ்சாதே ! என அபயம் தருகின்ற அமரா
வருந்தி வரும் அடியவர்கள் படும் துயரம் தீர்த்தாள
குருந்தமலை மீதிலே கொஞ்சும் வேலே
வற்றாத கருணை மலை நற்றாய் எனப் பொழியும்
வட்ட மலை தெய்வமே வெற்றி வேலேஅமரர் கூட்டம் ஆடவும் அசுரர் தோற்று ஓடவும்
சமர் புரிந்த குமரர் கோட்ட தவமணியே
அண்ணல் ராமலிங்க வள்ளல் நெஞ்சில்
அருள்பாவின் வெள்ளம் பொங்கச் செய்த
கந்தக் கோட்ட தமிழ்க்கனியே
தஞ்சம் என்று வந்து உன்னைக்
கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
துன்பம் தீர்க்க வேண்டுமய்யா சுடரொளியேவீறிட்டெழுந்த சூரன் போரிட்டழிய
திருப்போரூரில் வேல் விடுத்து நின்றவா
ஏறி வரும் மயிலின் பேரும் விளங்க
ஒரு ஊரை மயிலம் எனக் கொண்டவா
பக்தர்கள் தேரூர் பவவினை தீருர்
உத்தரமேரூர் உறைபவனே
எங்கும் இல்லாத விதத்தினிலே
பொங்கும் திருமயிலாடியிலே
வடதிசை நோக்கி அமர்ந்தவனே
மயிலை ஆடச் செய்தவனேவருபவர் பிணி தீர்க்கும் வைத்தீஸ்வரன்
பெற்ற முருகனே ஷண்முகா முத்துக்குமாரா
சரவணா எங்களின் சிறுவனைக் காப்பாற்று
சக்தி வேலாயுதா சூரசம்ஹாரா
திண்புய சூரனை வென்றதை முனிவர்க்கு
எண் கண்ணிலே சொன்ன சுப்ரமண்யா
கந்தன் குடி வாழ்ந்திடும் கந்தனே
அன்பரின் கண்ணுக்கு விருந்தாக அமர்ந்த புண்யா
தக்க தருணத்திலே பக்தரின் பக்கம் துணையிருப்பாய்
சிக்கலைத் தீர்த்து வைப்பாய் ஜெகம் புகழ் சிக்கல் சிங்காரவேலா
செட்டிமகன் என்னும் இறைவா
செந்தமிழின் தலைவா
எட்டிக்குடி தனிலே அகத்தியன் ஏற்ற குருவானவாபழகு தமிழ் கொண்டு அருணகிரி அன்று
திருப்புகழ் பாடிய வயலுரா
புலவன் நக்கீரன் புனைந்த முருகாற்றுப்படை போற்றும்
விராலி மலை வீரா
கொன்றதொரு சூரனைக் கோலமயிலாகவே
குன்றக்குடியில் கொண்ட குமரய்யா
கந்தய்யா எங்களின் கவலையைத் தீரய்யா
கழுகு மலையில் வாழும் வேலய்யா
கழுகு மலையில் வாழும் வேலய்யா
கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகள்
பருவத ராஜகுமாரியின் மகனே
பாசத்தை உணர்ந்த பாலகனே
திருமலை முருகா மழலையின் நாவில்
ஒரு மொழி தருவாய் காவலனே
தக்கலை குமாரவேலா
ஒரு தாய் நிலை அறிந்த பாலா
மக்களைக் காத்திடும் சீலா
என் மகனைக் காத்திட வா… வா ..வா
வள்ளியூரிலே குடிகொண்ட வள்ளிமணாளா வழிகாட்டு
பிள்ளைக்கு உந்தன் அருள் காட்டு
பிணிகள் விலகிடத் தாலாட்டுஅலைந்து தவித்தோம் குமரய்யா
வடபழனிக்கு வந்தோம் முருகய்யா
நலம் பெற வேண்டும் மகனய்யா
நம்பிக்கை தருவாய் கந்தய்யா
தணியாத கோபம் தணிந்த இடம் வந்தும்
தனித்தனியாக இருப்பவனே
கனிந்த முகம் காட்டு கலங்கும் எமைத் தேற்று
தணிகைமலை மீது வசிப்பவனேதந்தைக்கு ஓம் எனும் மந்திரப்பொருள் சொன்ன
ஸ்வாமி மலை வாழும் குருநாதா
மைந்தன் துயர்தீர வந்த பிணி மாற
கந்தா கடம்பா வரமே தா
பூவுதிர் சோலையில் வள்ளியை மணந்து
பழமுதிர் சோலைக்கு வந்தவனே
காவல் தெய்வம் நீ என வந்தோம்
கை கொடுப்பாய் எங்கள் மன்னவனேதிருப்புகழ் பாடி திருவடி தேடி
தெண்டனிட்டோம் எங்கள் தென்னவனே
திருப்பரங்குன்றத்து நாயகனே
குறை தீர்த்து வைப்பாய் வடிவேலவனே
வேலவனே .. வேலவனே
இந்தப் பாடலின் ஒளிவடிவமும் நமக்குக் கிடைக்கிறது. கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் பாடல் ஓடுகிறது. இத்தனை வரிகளையும் தொடர்ந்து பாடிய சுசீலாம்மாவிற்கும் டி.எம்.சௌந்தரராஜனும் முருகனுடைய ஆசி நிச்சயம் கிடைத்திருக்கும்.
முருகனருள் முன்னிற்கும்.
பாடலின் சுட்டி – http://youtu.be/aeGUa8rg3nM
அன்புடன்,
ஜிரா
077/365
amas32 (@amas32) 9:45 pm on February 16, 2013 Permalink |
என் வடபழனி முருகனைக் காணோமே என்று தேடினேன், இருக்கிறார் இரண்டாவது பாடலில் 🙂 அற்புதமான பாடல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. உங்களுக்கும் முருகனுடைய ஆசி நிச்சயம் 🙂
amas32
GiRa ஜிரா 5:03 pm on February 18, 2013 Permalink |
நன்றி. 🙂 வடபழனி முருகன் இல்லாமையா? வடபழனி முருகன் கோயில் மூலத்தில் இப்போது போல இல்லை. வெறும் படம்தான். பழனிமலையிலிருந்து வாங்கி வந்த படத்தை வைத்து ஒருவர் வணங்கிக் கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக கால மாற்றத்தில் ஆதி மறைந்து முற்றிலும் புதிதான கோயில் எழுந்து விட்டது.
rajinirams 10:01 pm on February 16, 2013 Permalink |
அருமையான பதிவு.பாடலை எழுதிய இரு கவிஞர்களையும் பாராட்டியே தீரவேண்டும்.இந்த பாடலுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவன் உண்மையிலேயே திரை இசை திலகம் தான்.பாராட்டுக்கள்.
GiRa ஜிரா 5:04 pm on February 18, 2013 Permalink |
கே.வி.மகாதேவன் ஐயமே இல்லாமல் திரையிசைத் திலகமேதான். 🙂
நூற்றியெட்டில் கொஞ்சம் | நாலு வரி நோட்டு 6:41 am on March 10, 2013 Permalink |
[…] பதிவில் தமிழகத்தில் இருக்கும் பிரபல முருகன் ஆலயங்களைப் பற்றியும் […]
anonymous 9:17 am on March 10, 2013 Permalink |
மிக எழிலான பாட்டு!
இணையம் ஏதுமின்றி, ஒதுக்கத்தில் இருப்பதால், இன்னிக்கி தான் இந்தப் பதிவைப் பார்த்தேன்; (அந்தப் பதிவில் இருந்து)
துணைவன் படம் – என் மனதோடு பேசும் படம்!
வாரியார் சுவாமிகளும், படத்தில் நடிச்சி இருப்பாரு;
வாரியார், முருகன் “பெருமை” பேசுவது போல ஆரம்பக் காட்சி;
அப்போ வாரியார் சொல்வது, “பொய், பொய், யாரும் நம்பாதீங்க” -ன்னு தான் Hero, AVM Rajan உள்ளே நுழைவாரு:))
வாரியார் நடிப்பும், நல்லாத் தான் இருக்கும்; It will tempt me, everytime I see the movie:)
——
மருதகாசி – கண்ணதாசன் கூட்டுப் பாட்டு (எப்பவோ, முருகனருள் வலைப்பூவில் இட்ட ஞாபகம்)
எத்தனை பெருங் கவிஞர்கள்; ஆனா ego இன்றி, இயைந்து எழுதிய பாட்டு;
இன்றைய எழுத்துலகப் பீடாதிபதிகள் -ன்னு சொல்லிக் கொள்கிறவர்களுக்கெல்லாம், இது ஒரு நல்ல பாடம், பயிற்சி;
இதே படத்தில் KBS என்னும் சுந்தராம்பாள் அம்மா பாடும் பல பாடல்கள், அவர் முருக வாழ்வின் இறுதிப் பாடல்கள்…
அதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்… “கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது”?
anonymous 11:00 pm on March 10, 2013 Permalink |
Here’s that link, for Vaariyar acting in thuNaivan movie
(He has “appeared” in other movies, but not to this big length, I think)
சிவகவி – he wrote the script/dialogue
தெய்வம், கந்தர் அலங்காரம், மிருதங்கச் சக்கரவர்த்தி, நவகிரக நாயகி -ன்னு dozen movies…
ஆனா, துணைவன் படத்தில், வாரியார் காட்சிகள் நீளமானவை:)
anonymous 9:36 am on March 10, 2013 Permalink |
//108 வைணவத்தலங்கள்னு சொல்றாங்க. ஆனா தமிழ்க்கடவுள்னு சொல்ற முருகனுக்கு ஆறு கோயில்தானா?”//
:)))
108 திவ்ய தேசத்துக்கும் மேலான ஒரு திவ்ய தேசம் இருக்கு!
அது 109 ஆம் திவ்ய தேசம்;
= “மனம்” எனும் திவ்ய தேசம்
இருப்பது ஒரே “திவ்ய” தேசம் தான்!
அதுக்குத் தான் “ஆறுதல்” தேவைப்படுது; மனம் ஆற்றும் ஆற்றுப்-படை, ஆறு-படை;
——–
முருகனின் தலங்கள் என்னென்ன -ன்னு ஒரு நூலே இருக்கு;
= சுப்ரமணிய ஷேத்திரக் கோவை
= பிள்ளைத் தமிழ் நடையில் அமைஞ்சி இருக்கும்; காஞ்சி சிதம்பர முனிவர் எழுதியது;
100 பாடல்கள்; 100 தலங்கள்
கைலாசத்தில் ஆரம்பித்து, கேதாரத்தில் முடிப்பாரு!
“உன் சன்னிதிக்கு நான் வர நீ, சிறு தேர் உருட்டி அருளே”
anonymous 9:49 am on March 10, 2013 Permalink |
108 திருத்தலம்
274 சிவ ஸ்தலம்
இப்படி, ஆழ்வார்கள் – நாயன்மார்கள் போல், தலம் தலமாகச் சென்று பாடிய முருகன் ஆலயங்கள் “குறை”வு தான்;
ஆனா, அந்தக் “குறை”யை, “நிறை”வு செய்ய வந்த ஒரேயொரு உள்ளம்
= அதுக்கு, “அருணகிரி” -ன்னு பேரு!
ஆழ்வார்கள் செய்வித்த “மங்களாசாசனம்” போல்,
முருகனுக்கு “மங்களாசாசனம்” செய்வித்தவர் = அருணகிரி
அதுவும் பன்னிருவராய் இல்லாது,
ஒரே ஒருவராய்… ஒத்த மனுசனாய் நடையாய் நடந்து…
——–
அந்த ஆலயங்கள் = கந்த ஆலயங்கள்
அவை எவை எவை?-ன்னு, திருப்புகழில் தேடித் தான் பிடிக்கணும்; படிக்கணும்!
இந்தக் “குறை” எனக்கு ரொம்ப நாளா உண்டு!
அதான், ஒரு தனிமையில், முருகன் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் குடுத்தான்…
தனிமையில் வந்த தனி மயில்!
மொத்த திருப்புகழ்த் தலங்களையும்,
ஒரே படத்தில் (Map), ஒரு Murugan Atlas போல் செய்து…
அந்தந்த Point-களில் கிளிக்கினால், அந்தந்தத் தலத்தின் திருப்புகழ் வருவது போல்…
Murugan Geographic Atlas
சுட்டி இதோ: http://murugan.org/temples/arunagirinathar_sites.htm
இதை murugan.org இல் பதிப்பித்தும் உள்ளார்கள்;
அழகன் ஆலயங்கள்! மனமென்னும் திவ்ய தேசங்கள்!
anonymous 10:52 pm on March 10, 2013 Permalink |
சிவனிரவு (சிவராத்திரி) அதுவுமா, “எண்ணிக்”கிட்டு இருந்தேன்…. இந்தப் பாடல்/ பதிவில் எத்தனை அழகன் ஆலயங்கள் வருது-ன்னு = மொத்தம் 28 ஆலயங்கள் வருது:)
மருதமலை, சென்னிமலை, சிவன்மலை,
வள்ளிமலை (எங்கூரு பக்கம்) & காங்கேய நல்லூர் (வாரியார் ஊர்)
திருமுருகன் பூண்டி, தென் திருமலை, குருந்தமலை
வட்டமலை, குமர கோட்டம் (காஞ்சி)
கந்த கோட்டம் (சென்னை), திருப்போரூர், மயிலம்
உத்திர மேரூர், வைத்தீஸ்வரின் கோயில்
சிக்கல், எட்டிக்குடி, வயலூர்
விராலி மலை, குன்றக்குடி
கழுகுமலை, தக்கலை, வள்ளியூர்
வடபழனி, தணிகைமலை
சாமி மலை, பழமுதிர் சோலை, திருப்பரங் குன்றம்
——–
இதுல என் மனசுக்குப் பிடிச்ச ஒரு இடம் = வள்ளி மலை
எங்கூரில் இருந்து, வேலூர் போயி,
குப்பு ரெட்டி தாங்கல் (அத்தை-மாமா கொஞ்ச நாள் வாழ்ந்த இடம்) கடந்து, ஆந்திரா Border…
வள்ளி மலை = கோயில் என்னவோ சிறுசு தான்; அதுனாலேயே ரொம்பப் பிடிக்கும்!
சடங்கு, பூஜை -ன்னு ஆர்ப்பாட்டம் அதிகம் இருக்காது…
மலை மேல காலாற உலாத்தலாம்,
தான் தோன்றியா உலாத்த உலாத்த, நெறைய இடம் வரும்… குகை, சுனை, பொங்கிப் பாறை, திருமால் உச்சி-ன்னு…
குகை வள்ளி = பட்டு/அலங்காரமெல்லாம் இல்லாம..
பேரழகியா இல்லாம,
ரொம்பச் சாதாரணமா இருப்பா – அந்த வடிவமே என்னமோ பண்ணும்;
மாலவன் மகள்; பொறந்த வீடு-ங்கிறதால, சடாரி/தீர்த்தமும் உண்டு;
——–
வள்ளியைப் “பொங்கி” -ன்னு கூப்புடுறது இங்கிட்டு(வடார்க்காடு) வழக்கம்;
= அவனே உள்ளத்தில் பொங்குவதால்!
= அடக்க முடியாமல் பொங்குவதால்!
மறைக்க முயன்றேன் முடியவில்லை – உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
-ன்னு கண்ணதாசன் பாட்டு, with susheelamma & PBS
அவளை (வள்ளியைப்) போலவே… கால் போன போக்கில், மலை மேல உலாத்த உலாத்த ரொம்ப நல்லா இருக்கும்;
இப்படி உலாத்தினால் பாதம் வருடுவானோ? பாதம் வருடிய மணவாளா, குறமகள் இங்கித மணவாளா…
குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப – மயல்தீர
குறை தீர வந்து குறுகாயோ? -ன்னு பாடல்;
வள்ளிமலைக்கு, ஒருத்தவங்க கூடவே போகணும்-ன்னு ரொம்ப நாள் ஆழ்மனசு ஆசை!
பதிவில், “வள்ளிமலை” -ன்னு பார்த்ததும், கப்-ன்னு பிடிச்சிக்கிச்சி!
anonymous 8:50 pm on March 24, 2013 Permalink |
சில இரவுகளா, இந்தத் தனிமையான முகாமில் ஒரே ஞாபகம்…
கந்த சட்டிக் கவசத்திலும், முருகத் தலங்கள் வரிசை வரும்; ஆனா இங்கு இணையம் இல்லாததால் ஒடனே பார்க்க முடியலை..
இணையம் இல்லீன்னா வாழ்க்கையே இல்லீயா என்ன?
இல்லாத போதும் இணைப்பவன் அவனே!
சட்டிக் கவசம் வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தேன்; சொல்லும் போதே, அதில் வரும் தலங்களை Paper-இல் குறித்துக் கொண்டேன்; after a long long gap, re-union; re-union with pen & paper:) இதோ..
—-
1. சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! = சிரகிரி (சென்னிமலை)
2. என்றனை யாளும் ஏரகச் செல்வ! = திருவேரகம் (சுவாமிமலை)
3. அரிதிரு மருகா அமரா வதியை; = அமராவதி
4. தணிகா சலனே சங்கரன் புதல்வா! = தணிகை (திருத்தணி)
5. கதிர் காமத் துறை கதிர்வேல் முருகா! = ஈழம் (கதிர்காமம்)
6. பழநிப் பதிவாழ் பால குமாரா! = (மலை மேல்) பழநி
7. ஆவினன் குடிவாழ் அழகிய வேலா! = (மலைக் கீழ்) ஆவி-நன்-குடி
8. செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா! = செந்தில் (திருச்செந்தூர்)
9. மா மலையுறும் செங்கல்வ ராயா = திருக்காளத்தி (அது என்ன செங்கல்? ன்னு தோனினா, காளஹஸ்தியில் இருக்கும் முருகன் பேரு = செங்கல்வராயன்)
10. சமரா புரிவாழ் சண்முகத் தரசே! = சென்னை-திருப்போரூர் (சமராபுரி)
11. குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும் = பழநி
12. உயர்கிரி கனக சபைக்கோர் அரசே! = சிதம்பரம் (தில்லை-கனக சபை; இங்குள்ள முருகன் பேரு = பாண்டிய நாயகன்)
சட்டிக் கவசத் தலங்கள்!