சிப்பிக்குள் முத்து
- படம்: ராஜபார்வை
- பாடல்: அந்திமழை பொழிகிறது
- எழுதியவர்: வைரமுத்து
- இசை: இளையராஜா
- பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, டி. வி. கோபாலகிருஷ்ணன்
- Link: http://www.youtube.com/watch?v=J7ThzbP32QI
சிப்பியில் தப்பிய நித்திலமே,
ரகசிய ராத்திரிப் புத்தகமே!
இன்றைக்கு நாம் அதிகம் பயன்படுத்தாத ஒரு சொல், ’நித்திலம்’. இந்தப் பாடலில் சிப்பியுடன் சேர்ந்து வந்திருப்பதால், அதன் அர்த்தத்தை ஊகிப்பது எளிது.
‘நித்திலம்’ என்றால் முத்து. திரைப்பாடல்களிலும் நமது பேச்சுவழக்கிலும் அவ்வளவாக உபயோகத்தில் இல்லாவிட்டாலும், பழந்தமிழ் இலக்கியத்தில் நிறைய நித்திலங்கள் உண்டு. சில உதாரணங்கள் இங்கே:
- ’ஒள் நித்தில நகையாய்’ : ஒளி நிறைந்த முத்துகளைப்போல் சிரிப்பவளே : திருவெம்பாவை (மாணிக்கவாசகர்)
- ’நித்தில முறுவல்’ : (சீதைக்கு) முத்துப்போன்ற புன்முறுவல் : கம்ப ராமாயணம்
- ’நித்தில அரி சிலம்பு’ : முத்துப் பரல்களைக் கொண்ட சிலம்பு : பரிபாடல் (பாடியவர் பெயர் தெரியவில்லை)
- ’நித்திலம் நிரைத்து இலங்கினவேபோலும் முறுவல்’ : (சிவனுக்கு) முத்துகளை வரிசையாக அடுக்கிவைத்ததுபோன்ற புன்முறுவல் : திருவிசைப்பா (கருவூர்த் தேவர்)
- ’ஆழ்பொருளுள்ளே மூழ்கி எடுத்து நிரல் படக் கோத்து நித்தில மாலைபோல்’… : திருக்குறளைப்பற்றிக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியது
நித்திலம் என்ற சொல் எப்படி வந்திருக்கும் என்பது தெரியவில்லை, ஆனால் ‘நிதி’ என்ற சொல் இதிலிருந்து வந்ததுதான் என எழுதுகிறார் முனைவர் இராம.கி. ஆரம்பத்தில் முத்துக் குவியலைக் குறித்த ‘நிதி’, பின்னர் பொதுவான செல்வத்தைக் குறிக்கும்படி மாறிவிட்டதாம்.
முத்துக்குமட்டுமல்ல, சிப்பிக்கும் ஓர் அழகான பழந்தமிழ்ச் சொல் உண்டு. ‘இப்பி’. இதற்கு உதாரணமாக, திருஞானசம்பந்தர் பாடிய ஒரு வரி: ‘ஒளிர் இப்பியும் முத்தும் மணியும்…’
***
என். சொக்கன் …
12 01 2013
043/365
N.Ramachandran 11:51 am on January 13, 2013 Permalink |
அருமை. இந்த பாடலும்,வரிகளும் பட்டையை கிளப்பியவை.”கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது – தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது”
இந்திரன் தொட்டது முந்திரியே,மன்மதநாட்டுக்கு மந்திரியே போன்ற வரிகளும் சூப்பர். இருந்த போதிலும் அதை விட
எனக்கு பிடித்தது ,கவியரசரின் “அழகே அழகு தேவதை,ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் என்ற ஜேசுதாஸ் குரலில் வரும் பாடலும்,காட்சியும்.நன்றி.
niranjanbharathi 2:24 pm on January 13, 2013 Permalink |
இப்பி என்ற புதிய சொல்லைத் இன்று தெரிந்து கொண்டேன். நன்றி :):)
என். சொக்கன் 8:39 pm on January 13, 2013 Permalink |
Note: This is a Comment We received on the blog, Not sure who wrote this
சென்ற வாரம்தான் நித்திலமே வார்த்தை உபயோகத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்…இணைய தேடலில், கிடைத்த விஷயம் “வைரமுத்துவிடம், கமல் அவர்கள் நித்திலமே வார்த்தை எல்லோருக்கும் புரியாது, அதை மாற்றி தருமாறு, வை. மு. வை கேட்க்க, வை.மு கண்ணதாசன் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளார் என்று அந்த பாடலை உதாரணம் காட்டிய பிறகு, கமல் ஒத்துக்கொண்டாராம்.”
என். சொக்கன் 8:40 pm on January 13, 2013 Permalink |
//கண்ணதாசன் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளார்// எந்தப் பாடலில்?
Saba-Thambi 8:46 pm on January 13, 2013 Permalink |
MGR திரைப் படம்: நாளை நமதே
பாடல்: காதல் என்பது காவியமானால்…
“நீலக்கடல் கொண்ட நித்திலமே, இந்த நாடகம் உனக்காக”..
பாடலாசிரியர் :புலமைபித்தன் ??
சபா
என். சொக்கன் 8:48 pm on January 13, 2013 Permalink |
நல்ல உதாரணம் 🙂 ‘நாளை நமதே’யில் அனைத்துப் பாடல்களும் வாலி எழுதியவை
Saba-Thambi 8:50 pm on January 13, 2013 Permalink
திருத்தலுக்கு நன்றி
என். சொக்கன் 8:52 pm on January 13, 2013 Permalink
திருத்தல் அல்ல சபா, நீங்களும் கேள்வியாகதானே கேட்டீர்கள்? 🙂
amas32 8:46 pm on January 14, 2013 Permalink |
நித்திலம் என்பது மிகவும் அழகான ஒரு சொல். பிள்ளைக்குப் பெயர் கூட வைக்கலாம் போலிருக்கிறது. (நித்திலா, நித்திலன், பொருள் மாறிவிடுமா?)
amas32
Saba-Thambi 5:39 pm on January 23, 2013 Permalink |
எனக்கு தெரிந்த பெண்ணுக்கு நித்தில நங்கை என்று பெயர் காலப் போக்கில் அது “நித்தி” என்று மாறிவிட்டது.