நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
ஒரு பாடலில் இரண்டு கேள்விகள்.
வைதேஹி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ?
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ?
வைதேஹி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ?
இதுவும் தெரியும். வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் ஸ்ரீராமன் தந்த பொன் வண்ண மாலையை பொங்கும் மகிழ்வோடு வைதேஹி ஏற்றுக்கொண்ட நேரமும் தெரியும்
யோசித்து பார்த்தால் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்று தோன்றுகிறது. ராமன் வில் ஒடிக்கும் முன் வந்துவிட்ட காதல். அவள் சுயம்வரம் கொள்ள வேறு சில மன்னவர்களும் மிதிலைக்கு வந்திருந்த வேளை. சட்டென்று ஜானகி மனதில் கலவரம் ‘இவன் வில்லை முறிக்கவில்லை என்றால் என்ன ஆகும்’ என்று கவலை. காணாமல் போன பக்கங்களில் சீதையின் நிலை என்ன? கண்ணதாசன் அழகாக ஜனகனின் மகளின் நிலையை விவரிக்கிறார்
இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க இராமனை தேடி நின்றாள்
என்று ஆரம்பித்து நாணம் ஒரு புறம் ஆசை ஒரு புறம் கவலை மறுபுறம் என்று அவள் நிலை சொல்கிறார்.
அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே
மணியும் மலரும் கூட உருகும் என்ற வரிகள் எவ்வளவு அழகு. நேரே பார்த்து வர்ணனை சொல்வது போல் தொடர்ந்து
அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை
என்று வாடும் ஒரு பெண்ணின் கோலத்தை கண்ணெதிரே காட்சியாக விரிக்கிறார். முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம் நடக்க அவள் சிந்தையெல்லாம் அவனிடம் இருந்ததை சொல்லி பிரமிக்க வைக்கிறார்.
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்
அப்புறம் என்ன ? எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர். வசந்தத்தில் ஓர் நாள் கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் மணமுடித்து – இனியெல்லாம் சுகமே
மோகனகிருஷ்ணன்
039/365
arvenky 10:53 am on January 9, 2013 Permalink |
I remembered this song late in the night but didnt had time to tweet it 😦
azad 2:26 pm on January 9, 2013 Permalink |
தேவர் எடுத்த மாணவன் திரைப்படத்திற்கு வாலி ஒரு பாடல் எழுதியிருக்கிறார் , அந்தப் பாடலை தேவர் வாங்கிப் பார்த்துவிட்டு , ” என்னப்பா நான் என்ன எம்.ஜி.ஆர் பாட்டா கேட்டேன் ஒம்பாட்டுக்கு ராமன் ஜானகின்னு எழுதியிருக்க.. நம்ம முருகனை பத்தி எழுதக் கூடாதா ? ” எனக் கேட்டிருகிறார்.
உடனே வாலி
மின்னுகி்ன்ற கண்ணிரெண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
என்று எழுதி கொடுத்தாராம்….
நன்றி: பணபுடன் கூகுள் குழுமத்தில் நண்பர் மரவண்டு கணேஷின் இடுகைக்கு.
amas32 (@amas32) 2:59 pm on January 13, 2013 Permalink |
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது அப்படியே மனதைப் பிழியும். அருமையாக விளக்கியுள்ளீர்கள் 🙂 கண்ணதாசன் அப்படியே ஜானகியாக மாறி பாட்டை வடித்துள்ளார். Hats off to him! Wished he had lived longer.
amas32