பிள்ளைக் கனியமுதே
கொஞ்சுவதற்குத் தகுந்த குழந்தை எது? ஆண்குழந்தையா? பெண்குழந்தையா?
கைக்குழந்தையாக இருவரும் கொஞ்சுவதற்குச் சுகமானவர்கள் என்றாலும், ஆண்குழந்தைகள் வளரவளர விளையாடத் தெருவுக்கு ஓடும்.
ஆனால் பெண் குழந்தைகள்?
விளையாடச் சொப்பு வாங்கிக் குடுக்கலாம்
விதவிதமாக நிறம்நிறமாகப் பொட்டு வைத்துப் பார்க்கலாம்
மல்லிகை, முல்லை, பிச்சி, ரோஜா, கனகாம்பரம் என்று நாளுக்கொன்றாய் பூ வைத்துப் பார்க்கலாம்
பட்டுப் பாவாடையும் சட்டையும் கட்டி அழகு பார்க்கலாம்
கைக்கு வளையல், காலுக்குக் கொலுசு, இடுப்புக்கு மேகலை, நெஞ்சு வரை சங்கிலி, கழுத்துக்குப் பதக்கம், காதுக்குத் தோடு, நெற்றிக்குச் சுட்டி என்று நகைகளைப் பூட்டி ரசிக்கலாம்
நீண்ட கூந்தலுக்குச் சிக்கெடுத்து சீர்படுத்தி தைலம் தேய்த்து குஞ்சலம் வைத்துப் பின்னலாம்.
இதையெல்லாம் செய்ய வசதியில்லாவிட்டாலும் காட்டுத் தாழம்பூவைப் பிரித்துக் கூந்தலில் சேர்த்துக் கட்டி அழகு பார்க்கலாம்
குளிர்ந்த மையை கண்களில் தீட்டி மானோ மீனோ என்று சந்தேகப்படலாம்
அந்த மையையே விரலோரத்தில் வழித்து கண்ணத்தில் லேசாக இழுகி திருஷ்டிப் பொட்டு வைக்கலாம்
இப்படிப் பெண்குழந்தைகளைக் கொஞ்சுவதற்கும் சீராட்டுவதற்கும் ஆயிரம் வழிகள். பையன்கள் ஒரு வயதுக்கு மேல் தலையைச் சீவக்கூட விட மாட்டார்கள்.
இத்தனைக்கும் மேலாக தந்தைக்கு நெருக்கம் பெண்பிள்ளைகளே.
பாரதியும் பெண்ணைப் பெற்றவனே. அதனால்தான் ”கண்ணன் என் குழந்தை” என்று எழுதாமல் ”கண்ணம்மா என் குழந்தை” என்று கவிதை எழுதினானோ!
சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா !
செல்வ களஞ்சியமே !
என்னைக் கலி தீர்த்தே – உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !
பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா !
பேசும்பொற் சித்திரமே !
அள்ளி யணைத்திடவே – என் முன்னே
ஆடி வருந் தேனே !
ஓடி வருகையிலே – கண்ணம்மா !
உள்ளங் குளிரு தடீ !
அடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ !
உச்சி தனை முகந்தால் – கருவம்
ஓங்கி வளரு தடீ !
மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால்
மேனி சிலர்க்குதடீ !
கண்ணத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !
சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது
சஞ்சல மாகு தடீ !
நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ !
”ஒரு குழந்தையைக் கொஞ்சுற சிச்சுவேஷன். இதுக்கு ஒரு பாட்டு வேணும்” என்று இயக்குனர்கள் சொல்லி நிறைய வாட்டி கேட்டிருப்பார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.
“ஒரு குழந்தையைக் கொஞ்சுற சிச்சுவேஷன். அதுக்கு இதுதான் பாட்டு. இதுக்கு மெட்டமைக்கனும்” என்று மெல்லிசை மன்னர் கேட்டது இந்தப் பாடலுக்காகத்தான் இருக்கும்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படங்களுக்கு 1980களில் இசையமைத்தவர் மெல்லிசை மன்னர். அந்தக் கூட்டணியால் நமக்குக் கிடைத்த அருமையான பாடல்தான் “சின்னஞ் சிறு கிளியே” என்ற பாரதியார் பாடல். இடம் பெற்ற படம் “நீதிக்குத் தண்டனை”.
ஒருமுறை நண்பர்களோடு தஞ்சாவூர் சென்றிருந்தேன். பெரிய கோயிலில் மாலை நேரத்தில் ஒரு இசைக்கச்சேரி. அதில் இந்தச் சின்னஞ்சிறு கிளியே பாடலைப் பாடினார்கள். பாடகர் பாடிய வேகத்திலும் மத்தளத்தைக் கொட்டு கொட்டுடென்று கொட்டிய வேகத்திலும் ஒரு குழந்தை எழுந்து ஆடத் தொடங்கிவிட்டது. ஆட வேண்டிய பாட்டா இது?
அப்படியெல்லாம் இல்லாமல் பாடலின் தன்மைக்கேற்ப அற்புதமாக இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.
இந்தப் பாடலின் வழியாக ஒரு புது பாடகியும் தமிழ்த் திரையிசைக்குக் கிடைத்தார். அவர்தான் சுவர்ணலதா. ”சரவணப் பொய்கையில் நீராடி” என்று சுசீலாம்மா பாடிய முருகன் பாடலைப் பாடிக் காட்டி மெல்லிசை மன்னரிடம் இந்த வாய்ப்பைப் பெற்றவர் சுவர்ணலதா. அவரோடு சேர்ந்து பாடியிருப்பவர் கே.ஜே.ஏசுதாஸ்.
இந்தப் பாடலை இந்தச் சுட்டியில் கேட்டு ரசிக்கலாம் -> http://www.youtube.com/watch?v=AaLYIYMyqSE
இந்தப் பாடலில் வரும் “உன் கண்ணில் நீர் வழிந்தால்” என்ற வரிகளைத் தொடக்க வரிகளாக எடுத்துக் கொண்டு கவியரசர் கண்ணதாசன் வியட்நாம் வீடு திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதினார்.
உன்கண்ணில் நீர்வழிந்தால் – எந்நெஞ்சில்
உதிரம் கொட்டுதடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? – கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?
இன்னொரு கலைஞனை ஈர்த்து சிந்தனையைத் தூண்டிவிடுவதுதான் படைப்பு. மற்றதெல்லாம் எழுத்துப்புடைப்பு. பாரதியின் எழுத்துகள் பாரதிதாசன் கண்ணதாசன் போன்ற பெருங்கவிகளை மட்டுமல்ல பலரை ஈர்த்துச் சிந்தனையைத் தூண்டியிருக்கிறது என்பதே உண்மை.
பாரதியின் பிறந்தநாளான இன்று இந்தப் பாடலைப் பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.
அன்புடன்,
ஜிரா
010/365
rmdeva 11:36 am on December 11, 2012 Permalink |
உண்மை. என் பையன், ஒரு வயது முதலே, தலை சீவ விடமாட்டேன் என்கிறான். 🙂 பாரதி ஒருவந்தான், தான் நினைத்ததை எந்தவிதமாகவும் மூடி மறைக்காமல் சொன்னவன். தன் வாழ்க்கயை, எந்தவித்திலும், தன் எண்ணங்களுக்கு புறம்பாக ந்டத்தாதவன்.
anonymous 4:37 pm on December 11, 2012 Permalink |
பாராண்ட தமிழின் தேராண்ட பாரதி
வாழ்க!
தமிழ்க் கவிதை என்னும் தேரை, புத்தம் புதிய திசையில் திருப்பியவன் = பாரதி
பிறந்தநாள் 11 12 12 வாழ்க!
———
//நண்பர்களோடு தஞ்சாவூர் சென்றிருந்தேன். பெரிய கோயிலில் மாலை நேரத்தில் ஒரு இசைக்கச்சேரி//
சின்னஞ் சிறு கிளியே-வை நாதசுரத்தில் வாசிக்கும் போது… மனசு என்னமோ பண்ணும்;
வரிகள் மறைஞ்சி, அப்படியே, நாதசுரத்தில் உணர்ச்சியா வழிஞ்சி ஓடும்;
———
//பாடலின் தன்மைக்கேற்ப அற்புதமாக இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்//
இந்த வரி, ரொம்ப யோசிக்க வைத்தது;
இசை அமைப்பதுக்கு முன்பே பிரபலமாகி விட்ட பாடல்களுக்கு, இசை அமைப்பது என்பது ரொம்பவும் கடினமான பணி;
“பாடலின் தன்மைக்கு ஏற்ப” ன்னு சொன்னீங்க பாருங்க; அது ரொம்பவும் முக்கியம்!
தன் மேதா விலாசத்தைக் கூட்டிக் கொள்ளாது, குறைத்துக் கொள்ளத் தெரியணும், இது போன்ற கட்டங்களில்;
இது MSV யால் முடியும்;
“பாடலின் தன்மைக்கு ஏற்ப” என்பதை உணர்ந்தவனால் தான் முடியும்; பணிவு இந்தக் குணத்தைப் பெற்றுத் தரும்;
மூலப் பாடலின் ஆன்மாவை,
வைர-வைடூர்ய அலங்காரத்தில் சிதைக்காமல்,
ஒரே ஒரு நாட்டு ரோஜா மாலை மட்டும்;
அது மட்டும் போட்டுக்கிட்டு வரும் திருச்செந்தூர் முருகனைப் பாத்து இருக்கீங்களா?
அந்த அழகு, இந்த இசையில்!
anonymous 4:55 pm on December 11, 2012 Permalink |
ஆண் குழந்தை மேல், தன் விருப்பங்களை ஏற்றிட முடியாது:)
பெண் குழந்தை மேல்? = கன்னா பின்னா -ன்னு ஏத்தலாம்:)
நீங்க சொன்னது போல், பொம்பளைப் பாப்பாவைக் கொஞ்சுவதில், கூட ஒரு படி சுகம்!
பாரதியும் அதையே நினைச்சானோ என்னவோ?
அதான் “கண்ணன் பாட்டில்”, நடுவே “கண்ணம்மா பாட்டு”
கண்ணன் பாட்டு தானே இது?
எப்படி “கண்ணம்மா” வந்தா? -ன்னு யோசிச்சி இருக்கீங்களா?
இதுக்கு முந்தன பாட்டு = கண்ணன் என் சத்குரு!
இதுக்கு அடுத்த பாட்டு = தீராத விளையாட்டுப் பிள்ளை!
இது மாத்திரம் எப்படிக் “கண்ணம்மா”?
ஒரு கால், மாறன் என்னும் 32 வயசுப் பையன் (பின்னாளில் ஆழ்வார்)
அவனின் நாயகி பாவம் போல், கண்ணனையே கண்ணம்மா ஆக்கி விட்டானோ பாரதி?
இல்லை!
= இது கண்ணன் பாட்டே அல்ல!
= இது பராசக்தி பாட்டு!
—————-
பாரதியார், இதுக்கு முன்னுரை எழுதும் போது,
“பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு”-ன்னு எழுதறாரு;
ஏன்?
கண்ணன் பாட்டுல எதுக்குப் பராசக்தி வரணும்?
கண்ணனுடன் பிறந்த குழந்தை பராசக்தி!
அவன் கிருஷ்ணன் என்றால், இவள் கிருஷ்ணை!
அவன் கருப்பன் என்றால், இவள் கருப்பி!
கண்ணன், ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் ஒளிந்து விளையாடினான்! ஆனா இவ?
இரண்டு தாய்களில், ஒருத்தியுடன் கூட வளராமல், கை மாறிய குழந்தை!
பெண் குழந்தையாச்சே, கம்சன் விட்டுருவான் -ன்னு நினைச்சாங்க;
ஆனால் கருத்துப் பிழை கொண்ட கம்சன் விடுவானா என்ன?
மூர்க்கத்தனமான பிடிப்புக்கு ஆண் என்ன? பெண் என்ன?
குழந்தையைக் கொல்ல உசரத் தூக்கினான்! உதை வாங்கினான்!
கம்சன் கையில் சிக்காமல், வானில் பறந்தாள் மாயோள்! காற்றில் கலந்தாள் – தெய்வமானாள்;
இன்னிக்கும் ஆயர்/ கோனார் வீடுகளில் (எங்க வீட்டில் உட்பட),
மணம் ஆகாமல் மறைந்து போகும் இளம் பெண்களுக்கு,
ஆண்டு தோறும் படையல் போடுவார்கள்!
புதுப் புடவையை ஒரு பொண்ணு போல சுத்தி, அதற்கு காதோலை-கருக மணி மாட்டி, நகை போட்டு, அதன் மடியில் பூ பழம் வச்சி, பூசை போடுவார்கள்!
பாரதியும் செய்வதும், கிட்டத்தட்டே அதே தான்!
கண்ணக் குழந்தை ஓடி விளையாடுது! ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா அல்லவா?
எனவே இன்னொரு குழந்தையான, இரவில் இடம் மாறிய பராசக்திக் குழந்தையை, கண்ணனின் தங்கச்சியைக், கண்ணனுடன் ஓடி விளையாடச் செய்கிறான்!
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!
= “பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு!
anonymous 4:57 pm on December 11, 2012 Permalink |
முல்லைச் சிரிப்பாலே, எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்!
இன்பக் கதைகள் எல்லாம், – உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே, உன்னை நேர்
ஆகுமோர் தெய்வம் உண்டோ?
anonymous 5:25 pm on December 11, 2012 Permalink |
எங்க ஆயா (பாட்டி = அப்பாவின் அம்மா),
கிராமத்தில், இந்தப் பாட்டை ராவுல பாடுவாங்க… அதுனாலயோ என்னவோ சின்னஞ் சிறு கிளியே… ரொம்ப நெருக்கம் ஆயிருச்சி…
அவுங்க வாழ்க்கை அம்புட்டு சரியா அமையலை;
கண்ணுல தண்ணிக்குப் பதிலா, இந்தப் பாட்டா வரும், அவுங்க கிட்ட இருந்து;
as a kid, i used to watch her body language closely in the night; = she melts in this song
ஒரு கிராமத்துல, எப்படித் தமிழ் இலக்கியப் பாட்டெல்லாம் புகுந்தது? -ன்னு எனக்கு இன்னிக்கும் வியப்பு தான்;
தீவிர சைவக் குடும்பம்; ஆனாலும், திருப்பாவை பாடித் தூங்க வச்சது ஆயா தான்; திருப்பாவை எழுப்புற பாட்டு -ன்னு அவுங்களுக்குத் தெரியாது போல:)
தூங்கிட்டேனாக்கும் -ன்னு பாட்டைப் பாதியிலே நிறுத்திடுவாங்களாம் ஆயா;
மறந்துட்டாங்க போல-ன்னு, மீதி திருப்பாவை, நான் எடுத்துக் குடுப்பேன் -ன்னு, அத்தை இன்னிக்கும் சொல்லிச் சிரிப்பாங்க:)
அம்மாக்கு இந்த வைணவப் பாட்டெல்லாம் ரொம்ப புடிக்காது; சில சமயம் ஆயா-அம்மா உரசலும் வரும்:)
வளர்ந்த பின், அப்போ கிடைச்ச TDK 60 Cassette ல பதிச்சி வச்சேன்;
இன்னும் அதை Cd/mp3 ஆ மாத்தத் தெரியாம, அதுக்காகவே mini Cassette player இன்னும் வச்சிக்கிட்டு இருக்கேன்;
ஆயா பாடிய – சின்னஞ் சிறு கிளியே – இன்னும் என் கூடவே இருக்கு, கடல் கடந்து!