சும்மா எனும் சுமை
பெங்களூருக்குப் போன புதிதில் தமிழ் நண்பர்களோடு பேசும் போது “சும்மா” என்ற சொல்லைப் பயன்படுத்தினால் வடக்கத்திய நண்பர்கள் “சும்மா” என்றால் என்ன என்று கேட்பார்கள். இந்தியில் சும்மா என்றால் முத்தம். தமிழர்கள் அடிக்கடி முத்தத்தைப் பற்றிப் பேசுகிறார்களே என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
ஒரு நாளில் நாம் எத்தனை முறை “சும்மா” சொல்கிறோம் என்பதும் எதற்கெல்லாம் “சும்மா” சொல்கிறோம் என்பது ஒரு ஆச்சரியமான புள்ளிவிவரமாக இருக்கக்கூடும்.
பேச்சில் இத்தனை சும்மா வரும் போது திரைப்படப் பாடல்களில் வராமல் இருக்குமா? இன்றைய மதன் கார்க்கி வரை திடைப்பாடல்களில் “சும்மா” இருக்கிறது.
பாடல்-1
படம் – தூங்காதே தம்பி தூங்காதே
இசை – இளையராஜா
பாடல் – வாலி
பாடியவர் – எஸ்.ஜானகி
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=xwtip74JdXk
சும்மா நிக்காதிங்க
நான் சொல்லும்படி வெக்காதிங்க
சின்ன மனசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது
பாடல்-2
படம் – முகமூடி
இசை – கிருஷ்ணகுமார்
பாடியவர் – ஆலப் ராஜு
பாடல் – மதன் கார்க்கி
பாடலின் சுட்டி – http://www.tamilpaa.com/596-vaayamoodi-summa-tamil-songs-lyrics
வாயை மூடி சும்மா இருடா
ரோட்டப் பாத்து நேரா நடடா
கண்ணைக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா!
சும்மா இருக்க முடியுமா என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு எல்லாரையும் ஒரு படத்தில் கேள்வி கேட்டு சும்மா இருப்பது எவ்வளவு கடினம் என்று நிரூபிப்பார். படத்தின் பெயர் தெரியவில்லை.
அந்தப் படத்தில் நடித்த வடிவேலுக்கு முன்னால் யாராவது சும்மா இருந்திருக்கின்றார்களா?
ஒருவர் இருந்திருக்கிறார். இன்னொருவர் அவரை சும்மா இருக்கச் சொன்னதால் இருந்திருக்கிறார்.
இருந்தவர் அருணகிரிநாதர். சொன்னவர் முருகன்.
காமக் கலவி என்னும் கள்ளை மொண்டு மொண்டு உண்டவர் அருணகிரி. தொழுநோய் அவரைப் பிடித்ததால் அவரை யாருக்கும் பிடிக்காமல் போனது. கோபுரத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்து குதிக்கும் போது தடுத்தான் முருகன். தடுத்த முருகன் அருணகிரிக்குச் சொன்னது “சும்மா இரு”.
நம்மால் சும்மா இருக்க முடியும? மனம் எதையாவது நினைக்கும். நாக்கு எதையாவது சாப்பிடச் சொல்லும். காதில் ஏதாவது ஒன்று விழுந்து மூளையை சிந்திக்கத் தூண்டும். உடம்பு ஒரே நிலையில் இருந்ததால் வலித்து நகரச் சொல்லும். இப்படி எல்லா வகையிலும் சும்மா இருக்க நம்மால் இருக்க முடியாது.
ஆனால் அருணகிரி சும்மா இருந்தார். இரவு, பகல், இன்பம், துன்பம், பசி, தாகம், வலி, வேதனை, வாசனை, சுவை, நினைவு, கனவு என்று எதுவும் தொல்லை கொடுக்காமல் சும்மா இருந்தார். அதனால் கிடைத்தது ஞானம்.
கிடைத்ததை இலக்கியத்திலும்(கந்தர் அநுபூதி) எழுதி வைத்தார்.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளன்றும் அறிந்திலனே
முருகன் சும்மா இரு என்று சொன்னதும் சும்மா இருந்ததால் இது வரையிலும் மிகப்பெரிய பொருளாகத் தெரிந்த உலக இன்பங்கள் ஒன்றுமில்லாமல் போனதை மிக அழகாகக் கந்தர் அநுபூதிப் பாட்டில் எழுதி வைத்தார் அருணகிரி.
அதெல்லாம் சரி. ஒரு போட்டி.
சுடச்சுட ஒரு டம்ளரில் ஃபில்டர் காப்பி. இன்னொரு தட்டில் மிளகு காரச்சேவும் திருநெல்வேலி அல்வாவும். இன்னொரு பக்கம் தொலைக்காட்சி. இன்னொரு பக்கம் மொபைல் ஃபோன்.
சுற்றிலும் இதையெல்லாம் வைத்துக் கொண்டு உங்களில் யாரெல்லாம் சும்மா இருக்க முடியும்? 😉
அன்புடன்,
ஜிரா
006/365
NIRANJAN 9:56 am on December 7, 2012 Permalink |
அருமையான பதிவு.
சார்லி சாப்ளின் படம் என்று நினைக்கிறேன். அதில் சும்மா என்ற வார்த்தையைப் பிரதானமாக வைத்து ஒரு டூயட் பாடலே எழுதினார்கள். யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. அதில் மொத்தம் 133 சும்மாக்கள் வரும் என்று நினைக்கிறேன்.
பிரபுதேவாவும், காயத்ரி ரகுராமும் இதில் நடித்திருப்பார்கள். இசை பரணி.
–>இது தான் அந்தச் சுட்டி.
சும்மா எழுதறது ஒண்ணும் சும்மா இல்ல 🙂 🙂
ரிஷி 10:00 am on December 7, 2012 Permalink |
Same pinch, NIRANJAN !! 🙂
GiRa ஜிரா 12:53 pm on December 7, 2012 Permalink |
அடா அடா அடா! இதுவல்லவோ சும்மா பாட்டு. உதித் நாராயணன் சும்மா என்ற சொல்லை மிக அழகாக உச்சரித்திருக்கிறார். சும்மா பிச்சி உதறிட்டாரு 🙂
ரிஷி 9:59 am on December 7, 2012 Permalink |
http://www.youtube.com/watch?v=m2UJk7JpVa8 சும்மா சும்மானு ஒரு பிரபு தேவா பாடல் இருக்கு…. http://www.thiraipaadal.com/Lyrics.asp?lyrid=4230&sngid=SNGBHA0023 சும்மாவுக்கு இவ்வளவு
அர்த்தங்களா ?? 🙂
//சுடச்சுட ஒரு டம்ளரில் ஃபில்டர் காப்பி. இன்னொரு தட்டில் மிளகு காரச்சேவும் திருநெல்வேலி அல்வாவும். இன்னொரு பக்கம் தொலைக்காட்சி. இன்னொரு பக்கம் மொபைல் ஃபோன்.
சுற்றிலும் இதையெல்லாம் வைத்துக் கொண்டு உங்களில் யாரெல்லாம் சும்மா இருக்க முடியும்? //
முடியும் ஆனா முடியாது 😉
GiRa ஜிரா 12:56 pm on December 7, 2012 Permalink |
// முடியும் ஆனா முடியாது 😉 //
புரியுது புரியுது. சும்மாதானே இருக்கு காராச்சேவு. அதச் சும்மா ஒரு கடி கடிச்சுக்கிட்டு… சும்மா கொஞ்சம் அல்வாவை விழுங்கிட்டு.. சும்மா ஒரு மடக்கு காப்பி சாப்பிட்டு… பிரண்ட்ஸ் கிட்ட சும்மா பேசிக்கிட்டிருக்கும் ஆட்களாச்சே நாமள்ளாம் 🙂
BaalHanuman 10:06 am on December 7, 2012 Permalink |
பாடல்-3
படம் – கிரி
இசை – டி.இமான்
பாடியவர் – தேவன், அனுராதா ஸ்ரீராம்
பாடல் – டேய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா…
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=k0Ap-xc0BzM
GiRa ஜிரா 1:57 pm on December 7, 2012 Permalink |
அட்டகாசமான பாட்டு சார். இந்தப் பாட்டை யார் சொல்வாங்கன்னு நெனச்சேன். நீங்க சொல்லிட்டிங்க 🙂
amas32 (@amas32) 11:23 am on December 7, 2012 Permalink |
சும்மா இருக்கும் சாமிக்கு சோத்து பட்டை இரண்டு கொடுங்க என்று ஒரு கோவிலில் இருந்த சித்தருக்கு, அவர் மௌனியாக சும்மா இருந்த செயலுக்கு இன்னும் ஒரு சாப்பாடு கிடைத்ததாக நான் படித்துள்ளேன். சும்மா இருப்பதே இன்றைக்கு பிரபலமாக இருக்கும் ஜென் நிலை! 🙂
amas32
GiRa ஜிரா 2:03 pm on December 7, 2012 Permalink |
செம கத அது. சரியா எடுத்துச் சொல்லிட்டிங்க. சும்மா இருப்பதே சுகம். 🙂
@rmdeva 2:32 pm on December 7, 2012 Permalink |
அம்மான்னா சும்மா இல்லடா..அவ இல்லைனா யாரும் இல்லைடா
ஜிரானா சும்மாவாஜென் தடத்துவம் மாதிரி சும்மா தத்துவம் சொன்ன ஜிரவுக்கு ஜெ
anonymous 2:48 pm on December 7, 2012 Permalink |
“சும்மா” -ன்னா “அம்மா” தான்:)
பிழை பல செய்தாலும், சும்மா இருக்க அம்மாவால் மட்டுமே முடியும்!
அதான்…கந்த சட்டிக் கவசத்தில்…
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
“பெற்றவன்” நீ குரு, பொறுப்பது உன் கடன்
– ன்னு பாடுவாரு!
அதான் போலும், கவச காலத்துக்கெல்லாம் முன்னாடியே, அருணகிரியும்…
சும்மா இரு = “அம்மா” பொருள்…. -ன்னு பாடினாரோ?
சும்மா இருப்பது = அம் – மா – பொருள்
எளிது அன்று; பெரிது, மா, மாபெரும் ;
அதனால் “அம் மா” பொருள் ஒன்றும் அறிந்திலனே என்றும் பரவிய அருணகிரி;
anonymous 3:01 pm on December 7, 2012 Permalink |
சும்மா பற்றிய பாடல் பதிவு சும்மா இல்லை;
சும்மா நச்:)
வேறு சில “சும்மா” பாடல்கள்:
“சும்மா” கும்மு -ன்னு ஏறுது கிக்கு எனக்கு:))
(படம்: காக்கிச் சட்டை, பாடல்: வாலி)
அவ கண்ணுக்குள்ள தான் மின்னல் அடிக்குது – “சும்மா சும்மாடி”
(படம்: வைகாசி பொறந்தாச்சு; பாடல் – ?)
ன்னு வரும் -ன்னு நினைக்கிறேன்;
old is gold; சுசீலாம்மா பாடும் வித்தியாசமான பாட்டு – படம் பேரு சரியா ஞாபகம் இல்ல
BaalHanuman 6:42 am on December 8, 2012 Permalink |
படம் – கேடி (2006)
நடிகர்கள்: ரவி கிருஷ்ணா – தமன்னா
இயக்குனர்: ஜோதி கிருஷ்ணா
இசை – யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் – சுனிதா சாரதி
பாடல் – சும்மா சும்மா நீ பார்க்காதே… சும்மா சும்மா நீ சொக்காதே…
பூக்காத பூவெல்லாம் முள்ளாகுமே…
எனைக் காணாத கண்ணெல்லாம் கல்லாகுமே….
பாடல் ஆசிரியர்: பா.விஜய்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=8K39DNbFUlM
BaalHanuman 7:33 am on December 8, 2012 Permalink |
சுஜாதா பதில்கள் – பாகம் 1
? ‘சும்மா’வுக்கு அருஞ்சொற்பொருள் கண்டுபிடித்தாகிவிட்டதா ?
! சுகமா என்பதன் மரூஉ என்கிறார்கள். சும்மென என்கிற பிரயோகம் பிரபந்த காலத்தில் இருக்கிறது. சும்மாச் சும்மா இதையே கேட்டுக் கொண்டிருந்தால் அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன். ஆமாம்! அருஞ்சொற்பொருள் தெரியாவிட்டாலும் என்ன! சும்மா பயன்படுத்துங்கள்.
GiRa ஜிரா 7:00 pm on December 8, 2012 Permalink |
அருமையான தகவலுக்கு நன்றி 🙂
சும்மென என்பதிலிருந்து சும்மா உண்டாகியிருக்கக்கூடும். கன்னடத்தில் சும்னே இரு என்றால் சும்மா இரு என்று பொருள்.