வட்டிச் சோறு
- படம்: கிழக்குச் சீமையிலே
- பாடல்: ஆத்தங்கர மரமே
- எழுதியவர்: வைரமுத்து
- இசை: ஏ. ஆர். ரஹ்மான்
- பாடியவர்கள்: மனோ, சுஜாதா
- Link: http://www.youtube.com/watch?v=NdXPojNF9JM
மாமனே, ஒன்னக் காங்காம, வட்டியில் சோறும் உங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே!
காகம்தான் கத்திப் போனாலும், கதவுதான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பா(ர்)க்க ஓடி வந்தேனே!
கிராமிய மொழியில் எழுதப்பட்ட இந்தப் பாடலில் வரும் ‘காங்காம’, ‘உங்காம’ என்கிற வார்த்தைகளைக் ‘காணாமல்’, ‘உண்ணாமல்’ என்று வாசிக்கவேண்டும், அது எல்லாருக்கும் தெரியும்.
ஆனால், அதென்ன ‘வட்டியில் சோறும் உங்காம’?
‘வட்டி’ அல்லது ‘வட்டில்’ என்பது தட்டையான வட்ட வடிவப் பாத்திரம். அதில் சோறு உண்பதைதான் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் வைரமுத்து.
செட்டிநாடு பகுதியில் இதை வைத்து ஒரு வேடிக்கையான வாசகமும் உண்டு. ‘அவன் வட்டியில் சாப்பிடுகிறான்’ என்றால், வட்ட வடிவப் பாத்திரத்தில் சாப்பிடுகிறான் என்று ஓர் அர்த்தம், பணத்தை மற்றவர்களுக்குக் கடன் கொடுத்து, அதில் வரும் வட்டித் தொகையை வைத்துச் சாப்பிடுகிறான் என்று இன்னோர் அர்த்தம்.
யார் கண்டது? இந்தக் கதாநாயகி கிராமத்தில் வட்டிக்கடை வைத்திருந்தாளோ என்னவோ!
***
என். சொக்கன் …
06 12 2012
005/365
GiRa ஜிரா 11:10 am on December 6, 2012 Permalink |
எதிர்பாராமல் நடந்ததடி என்று என்னைப் பாட வைத்து விட்டீர்கள்.
வட்டியில் சோறும் உங்காம என்று நீங்க தொடங்கும் போது. இலக்கிய வட்டில்களைப் பத்திச் சொல்லப் போறீங்க… அதிலும் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கசைய என்ற பாட்டைச் சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்தேன்.
ஆனால் ”வட்டி”யைச் சொல்லி வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி விட்டீர்கள். அட்டகாசம். அட்டகாசம்.
Kannabiran Ravi Shankar (KRS) 4:46 pm on December 6, 2012 Permalink |
//யார் கண்டது? இந்தக் கதாநாயகி கிராமத்தில் வட்டிக்கடை வைத்திருந்தாளோ என்னவோ!//
:))))
சேச்சே; பாவம், நல்லப் பொண்ணு;
அதான் “வட்டியில்” சோறு உண்ணாம -ன்னு சொல்லுறாளே; அப்படீன்னா “வட்டி” வாங்கலை -ன்னு தானே அர்த்தம்?:)
Jokes apart…
வட்டிலில் சோறு திங்கும் சுகமே சுகம்;
எத்தனை பேரு வீட்டில் இன்னிக்கி வட்டில் இருக்கோ தெரியாது; ஆனா கிராமத்தில் வட்டில் சோறு இன்பமோ இன்பம்!
அதுவும் ஆப்பம் தின்ன ரொம்ப வசதியானது = வட்டிலே!
வட்டிலுக்குள் கை உள்ளே போகும்; தட்டு போல தடவ வேணாம்;
பால் ஊறி இருக்கும் அப்பத்தை, குழிவான வட்டிலில் கை விட்டு எடுக்கும் சுகம்!
அட, இறைவனே வட்டிலில் தாங்க சாப்புடறான்:)
பொன் “வட்டில்” பிடித்து உள்ளே புகப் பெறுவேன் ஆவேனே -ன்னு ஆழ்வார் பாசுரம்!
செந்தூர் முருகனுக்கு, புட்டமுது, வட்டிலில் போட்டுத் தான் காட்டுறாங்க! ஒரு வாரத்துக்கு முன்னாடித் தான் பார்த்தேன்;
தட்டு = decent guys
வட்டில் = முருகன், என்னைய போன்ற indecent ஆட்களுக்கு:))
Kannabiran Ravi Shankar (KRS) 5:20 pm on December 6, 2012 Permalink |
வட்டி = Interest க்கு வருவோம்!
வட்டி (vaddi) பிறமொழிச் சொல்; தமிழில் புழங்கிடும் திசைச்சொல் -ன்னு ஒரு கருத்து நிலவுகிறது;
தெலுங்குல யும் Vaddi தான்; வட்டிக் காசுல வாடா -ன்னு கோ’ஷ’ம் போடுவாங்க திருப்பதியில்:)
ஆனா, சங்கத் தமிழில், இந்த வட்டிக்கு உள்ள சொல் = “கந்து”!
(கந்து வட்டி ஞாபகம் வருதா?
நடு சென்ட்டர் போல ரெண்டு சொல்லும் ஒன்னாக் கலந்து, கந்து வட்டி -ன்னு ஆயிருச்சி:)
கந்து = பிடிமானம்
யானையைக் கட்டும் பிடிமானம்; சின்ன ஆனா உறுதியான கல்தூண் போல-ன்னு வச்சிக்குங்களேன்;
யானை, ஒரு இடத்தில் இருந்து, இன்னொரு இடத்துக்குப் போகும் போதெல்லாம், இந்தக் கந்தையும், அதையே சுமக்க வைப்பாங்க!
அதையே சுமக்க வச்சி, பின்பு அதிலேயே கட்டியும் விடுவாங்க!
அதே போல் நம்மையே சுமக்க வச்சி, நாமே கட்டும் தொகை = கந்து / வட்டி :))
————–
சங்கத் தமிழில், “கந்து” என்பதே = Interest/ பிடிமானம்
“வட்டி”க்கு வேற பொருள் = உழவர்கள் கொண்டு செல்லும் விதைப் பெட்டி;
வித்தொடு சென்ற “வட்டி” பற்பல.
மீனொடு பெயரும் யாணர் ஊர
உழவர்கள், விதைக்குற பெட்டியில் (வட்டியில்), விதைகளை எடுத்துச் சென்று விதைச்சிட்டு…
திரும்பி வரும் போது, வயலில் உள்ள மீன்களை, அதில் அள்ளிப் போட்டுக்கிட்டு வராங்களாம்! அந்தப் பெட்டி தான் வட்டி:) இன்னிக்கு இருக்குற மீட்டர் வட்டி அல்ல!:)
@rmdeva 5:17 pm on December 7, 2012 Permalink
நன்றிகள் பல உங்களுக்கு. பல அறிய தகவல்கள், கந்தனுக்கும் வட்டிக்கும் உள்ள தொடர்பு இப்பொழுதுதான் அறிகிறேன்.
Kannabiran Ravi Shankar (KRS) 5:31 pm on December 6, 2012 Permalink |
அட, முக்கியமானத சொல்ல மறந்துட்டேனே…
முருகனுக்கு = “கந்தன்” என்ற பேரு வந்ததும் அதனால் தான்!
கந்து->கந்தன்
ஒடனே அவனை வட்டிக்காரன் -ன்னு நினைச்சிறாதீக:)) பாவம், என் செல்லம்:)
யானையைப் போல, நமக்கு எல்லாப் பணியும் செய்யுறான்;
அதே சமயம், நம் சுமையும், அவனே சுமக்குறான்,
இப்படிச் சுமக்கணும் -ன்னு அவனுக்குத் தலையெழுத்து இல்ல;
ஆனாலும்… அன்பால் சுமக்குறான் = நம்மையும், நம் ஆசைகளையும்
அவன் => கந்து + அன் = கந்தன்!
கந்து = பிடிமானம்
கந்தன் = பிடிமானம்
நீதி தழைக்கின்ற தனிமுதலே – கந்தா
நாயேன் பிழைக்கின்றவாறு நீ பேசு!
Muthu Ganesh 2:29 pm on December 7, 2012 Permalink |
KRS,
கலக்குங்க KRS !! Bonus post for us !
தாங்கள் தொண்டு தொடர வேண்டும். “கந்து” விளக்கம் அருமை !!