நாளும் நிலவும்
எம்.ஜி.ஆரை வைத்து பி.ஆர்.பந்துலு இயக்கிய இரண்டாவது படம் நாடோடி. இந்தப் படத்தில் ஒரு மிக இனிய பாடல். பாடலை இந்தச் சுட்டியில் கேட்கலாம்/பார்க்கலாம். https://www.youtube.com/watch?v=d_V7Kg6mmgs அந்தப் பாடல் வரிகளைப் பார்ப்போம்.
படம் – நாடோடி
ஆண்டு – 1966
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா & எல்.ஆர்.ஈசுவரி
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
அன்றொருநாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகில்
நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை
நீ அறிவாயே வெண்ணிலவே
இந்தப் பாடலின் காட்சியமைப்பை முதலில் பார்க்கலாம்.
இரண்டு பெண்கள். அவர்கள் சகோதரிகள்.
இரவு நேரம். அதுவும் முழுநிலவு நேரம்.
முன்பொரு முழுநிலவில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.
அன்று காதலன் கூட இருந்தான். காதற் களிப்போடு கூடி இருந்தான்.
அந்த எண்ணம் சொற்களில் வண்ணம் பூசிக் கொண்டு பாடலாக வருகிறது. அதுதான் இந்தப் பாடல்.
சரி. இதற்கும் இலக்கியத்துக்கும் என்ன தொடர்பு? உண்டு. உண்டு.
புறநானூற்றில் ஒரு காட்சி.
அங்கும் இரண்டு பெண்கள். அவர்கள் சகோதரிகள்.
இரவு நேரம். அதுவும் முழுநிலவு நேரம்.
முன்பொரு முழுநிலவில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.
அன்று தந்தை கூட இருந்தார். செல்வச் செழிப்போடு கூடி இருந்தார்.
ஆனால் சினிமாப் பாடலில் வந்த சகோதரிகளைப் போல இவர்கள் நிலை இல்லை.
அன்று இருந்த தந்தை இன்று இல்லை. மூவேந்தரும் கூடி அவர்களின் தந்தையைக் கொன்று விட்டனர். அதனால் இவர்கள் இருவரும் அனாதைகள். இல்லை. அனாதைகளாக்கப்பட்டவர்கள். பெரும்புலவர் கபிலரின் ஆதரவில் ஏழ்மையில் இருக்கும் நிலையினர்.
அந்த எண்ணம் சொற்களில் சோகம் பூசிக் கொண்டு பாடலாக வருகிறது. அதுதான் இந்தப் பாடல்.
அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்
எந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசில் வேந்தரெம்
குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.
இப்போது புரிந்திருக்குமே அந்தப் பெண்களின் தந்தை யாரென்று. அவர்தான் பார் புகழ் பாரி. மாரி(மழை) மட்டும் உலகுக்கு வளம் கொடுக்காது. மாரியை விடச் சிறந்த பாரியும் உண்டு என்று புகழ்ந்த பாரி அவர்களின் தந்தை.
அந்தப் பெண்கள்தான் பாரிமகளிர். அவர்களின் பெயர்கள் அங்கவை-சங்கவை என்பவை. தமிழ் கற்ற அரும் பெண்கள்.
கவியரசருக்கு இவர்களைப் பற்றித் தெரிந்திருக்கிறது. புறநானூறு படித்திருக்கிறார். சோக எண்ணம் பிரதிபலிக்கும் ஒரு பழைய பாடலில் இன்பச்சுவை பரவுமாறு ஒரு கவிதை எழுதுகிறார். அதுதான் “அன்றொருநாள் இதே நிலவில்” என்ற அழகான பாடல். அது அங்கவைக்கும் சங்கவைக்கும் கவியரசர் செய்த மரியாதை. அவருக்கு நன்றி.
இன்றும் அங்கவை சங்கவை திரைப்படங்களில் வருகிறார்கள். பாவம். அங்கவை-சங்கவை-பொங்கவை என்ற நகைச்சுவைகளிலும் பழக வரும்படி அழைப்பதிலும் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள். அப்படிச் செய்த மனப்பிறழ்வாளர்களை இறைவனும் தமிழும் மன்னிக்கட்டும்.
அன்புடன்,
ஜிரா
004/365
Niranjan 9:16 am on December 5, 2012 Permalink |
ரொம்ப ரொம்ப அருமை. கண்ணதாசனும் சங்கத்தமிழும் இணையும் போது ஜிரா அவர்களின் தெரிவு ஜிரா போல் இனிக்கிறது.
தினந்தோறும் இந்தப் பக்கத்தின் பக்கம் நான் வராமல் போனதே இல்லை. வாழ்க நும் தொண்டு.
BaalHanuman 12:17 am on December 6, 2012 Permalink |
அந்த நாள் அந்த நிலா…
பாடியவர் – பாரி மகளிர்
திணை – பொதுவியல்
துறை – கையறு நிலை (நாட்டையும் தந்தையையும் இழந்த நிலையில் பெரிதும் கலங்கிப் பாடியது)
அந்த மாதம்
அந்த நிலவில்
தந்தை இருந்தார்
குன்றும் இருந்தது.
இந்த மாதம்
இந்த வெண்ணிலவில்
வெற்றி முரசு வேந்தர்கள்
குன்றும் கொண்டனர்
எங்கள் தந்தையும் இல்லையே!
-புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத் தொகுதி) – சுஜாதா
என். சொக்கன் 8:59 am on December 6, 2012 Permalink |
Thanks, the kind of extra details you add to #4VariNote are wonderful 🙂
BaalHanuman 12:21 am on December 6, 2012 Permalink |
12-12-12 அன்று வெளியாகவிருக்கும் சிவாஜி 3D படத்தில் 25 நிமிடம் கிட்ட குறைத்து இருக்கிறார்கள். அநேகமாக சர்ச்சைக்குள்ளான காட்சிகளான “அங்கவை சங்கவை” போன்றவை நீக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். சிவாஜி பெரிய படம் அதனால் 25 நிமிடம் குறைத்தால் கூட சாதாரண படத்தின் நீளம் தான் இருக்கும்.
–நண்பர் கிரியின் பதிவிலிருந்து…
–http://www.giriblog.com/2012/12/sivaji-3d-preview.html
என். சொக்கன் 8:58 am on December 6, 2012 Permalink |
Thanks, the kind of extra details you add to #4VariNote are wonderful 🙂
GiRa ஜிரா 2:36 pm on December 7, 2012 Permalink |
ஐயா, முதலில் இந்தப் பதிவின் கடைசி வரியை நீக்கிவிடலாமோ என்று நினைத்தேன். ஒவ்வொருவரும் நாட்டில் ஒவ்வொன்று செய்கிறார்கள். அவர்களின் செயல்களில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பதா என்றொரு எண்ணம். அத்தோடு பதிவில் என் சொந்தக் கருத்தையும் சொல்ல வேண்டுமா என்ற யோசனை. ஆனால் அங்கவை சங்கவைக்கு மட்டுமல்ல.. தவறைத் தவறு என்று சொல்கிறவன் கூட அதைச் சொல்லலாமா கூடாதா என்ற கையறு நிலையில் இருப்பது சகிக்கமுடியாமல் இருந்தது. ஆகையால் அந்த வரிகளை அப்படியே விட்டுவிட்டேன்.
உங்களைப் போன்ற பெரியவர்கள் புரிந்து கொண்டு மறுமொழியிட்டு இந்த “எடிட்டிங்” தகவல்களையும் சொன்னமைக்கு நன்றி. நன்றி. 🙂
anonymous 4:06 pm on December 6, 2012 Permalink |
அன்றொருநாள் இதே நிலவில் -ங்கிற சினிமா வரிகளுக்கு
அற்றைத் திங்கள் அந் நிலவில் -ங்கிற சங்க வரிகள்…
இப்படி உங்களுக்கு ஞாபகம் வந்தது மிக நன்று; மிக நன்றி!
என்னவொரு இயைவான ஒப்புமை;
சினிமாவில் = காதல் ஏக்கம்;
சங்கத் தமிழில் = தந்தை ஏக்கம்; ஆயினும் கூடவே, வாழ்விலே காதல் அமைய இத்தனை பாடுகளா? என்னும் பெண் மனசு ஏக்கம்! பாரி மகளிர் பட்ட பாடு அப்படி;
அன்று மறுதலிக்காதவர்கள், இன்று மறுதலிக்கின்றார்களே என்ற ஏக்கம்;
தமிழே (கபிலர்) படியேறிக் கேட்டும், அதற்கும் மதிப்பில்லை;
மூவேந்தரிடம், தங்கள் தன்னலம் காத்துக் கொள்ளும் ஆசையால், முன்னாள் நட்பை இந்நாள் மறுதலிப்பு;
அதுவும் பொதுவிலே வைச்சி, ஒரு பொண்ணை மறுதலிப்பது என்பது… அந்தப் பெண் எத்தனை பட்டு, இந்தப் பாட்டை எழுதினாளோ? முருகா!
அற்றைத் திங்கள் அந்நிலவில் பாட்டுக்கு = முன்பு எழுத்தாளர் சொக்கன் எழுதிய பதிவு இங்கே = http://365paa.wordpress.com/2012/05/19/318/
//அப்படிச் செய்த மனப்பிறழ்வாளர்களை இறைவனும் தமிழும் மன்னிக்கட்டும்//
அப்படியே ஆகுக!
இறைவனுக்கும், தமிழுக்கும் மேலான காதல் என்னுமோர் உணர்வு; அங்கவை சங்கவையின் மன உணர்வு – அதுவும் அவர்களை மன்னிக்கட்டும்!
anonymous 4:23 pm on December 6, 2012 Permalink |
நீங்க இட்ட இந்தப் பாடலைப் படிச்சிக்கிட்டு இருக்கும் போதே, மனசுக்குள், இன்னொரு பாட்டும் ஓடியது!
சுசீலாம்மா – TMS பாடுவது;
அதே அற்றைத் திங்கள்;
அதே நிலாவைச் சாட்சி வச்சி;
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா
முன்பு வந்த நிலா=இன்பம்; பின்பு வந்த நிலா=துன்பம்
பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா
தூங்கச் சொன்னது காதல் நிலா
துடிக்க விட்டது கால நிலா…
ஆனா அற்றையைப் பாக்க முடியாம இருக்குதா மனசுக்குள்ள?
அற்றைத் திங்கள் = இன்ப நிலா
இற்றைத் திங்கள் = துன்ப நிலா
அற்றையோ, இற்றையோ…
பாரி மகளிர் / புனிதா (எ) காரைக்காலம்மை போன்ற மனசு…
= எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும்!