மயிலின் தோகை
கதாநாயகியை மயிலாகப் பார்க்காத கவிஞர்கள் உண்டா? மிகப்பிரபலமான இரண்டு வாலியின் பாடல்களைப் பார்க்கலாம்.
பாடல்-1
படம் – கடவுள் அமைத்து வைத்த மேடை
ஆண்டு – 1979
இசை – இளையராஜா
பாடியவர்கள் – ஜென்சி & எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மயிலே மயிலே உன் தோகை எங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ தளிருடல் தொடலாமோ
பாடல்-2
படம் – இரு மலர்கள்
ஆண்டு – 1967
இசை – எம்.எஸ்.விசுவநாதன்
பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலாள்
அன்புக் காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
இந்த இரண்டு பாட்டுகளிலும் பெண்ணைத்தான் மயிலாக உருகவித்திருக்கிறார் கவிஞர். அதிலும் தோகை என்னு அழகை பெண்ணுக்கு உரித்தாக்கியிருக்கிறார்.
ஆனால் அதில் ஒரு முரண் இருக்கிறதே! ஆண் மயிலுக்குத்தானே தோகை உண்டு. அப்படியிருக்க பெண்ணை மயிலுக்கு ஒப்பிடுவதும் தோகை என்னும் அழகை பெண்ணுக்கு இணைப்பதும் சரியாக இருக்க முடியுமா? இது இலக்கணப்படி சரியாகுமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இலக்கத்தில் விடை உண்டு என்பதே வியப்பு. ஆம். தொல்காப்பியம் இதற்கு அழகான விளக்கம் சொல்லியிருக்கிறது.
தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரங்கள்.
1. எழுத்ததிகாரம்
2. சொல்லதிகாரம்
3. பொருளதிகாரம்
பொருளதிகாரத்தில் மரபியல் என்று ஒரு பகுதி. எது எது என்ன என்ன என்று சொல்லும் மரபுகளை விளக்கும் பகுதி அது. அதனால் அதற்கு மரபியல் என்று பெயர்.
அந்த மரபியலில் கீழ்க்கண்ட வரிகளைப் பார்ப்போம்.
சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்
மா இருந் தூவி மயில் அலங்கடையே
இந்த இரண்டு வரிகளையும் விளக்கவே நான்கைந்து பக்கங்கள் தேவை. சுருக்கமா பொருளை மட்டும் பார்க்கலாம்.
பறவைகளின் ஆண் பறவைகளுக்கு என்ன பெயர்? இந்த மரபைச் சொல்லும் வரிகள்தான் இவை.
பொதுவாகவே ஆண் பறவைகளுக்குச் சேவல் என்று பெயர். அது எந்தப் பறவையின் ஆணாக இருந்தாலும் அது சேவல்தான். எடுத்துக்காட்டாக உவணச் சேவல் என்ற பெயர் சிலப்பதிகாரத்தில் வருகிறது. அதற்கு இன்றைய பெயர் கருடன். பருந்தின் ஆண்பறவைக்கு உவணச் சேவல் என்று பெயர்.
ஆனால் இந்தச் சேவல் என்ற பெயர் எல்லாப் பறவைகளுக்கும் பொருந்தி ஒரேயொரு பறவைக்கு மட்டும் பொருந்தாதாம்.
அந்தப் பொருந்தாப் பறவை மயில்.
ஏன் பொருந்ததாது?
அதற்கு மயிலின் அழகிய தோகை (மா இரும் தூவி) காரணம்.
அப்படி அழகிய தோகையைக் கொண்டிருப்பதால் மயிலின் ஆண் பறவைக்குச் சேவல் என்ற பெயர் பொருந்ததாதாம்.
இப்போது புரிந்திருக்குமே ஏன் திரைப்படக் கவிஞர்களும் பாடலாசிரியர்களும் மயிலை பெண்ணுக்கே உவமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று!
இது போல வேறு எந்தப் பாடல்களில் எல்லாம் பெண்ணை வர்ணிக்க மயிலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்!
அன்புடன்,
ஜிரா
03/12/2012
002/365
BaalHanuman 9:24 am on December 3, 2012 Permalink |
பாடல்-3
படம் – பாரதி
ஆண்டு – 2000
இசை – இளையராஜா
பாடியவர் – பவதாரிணி
கவிஞர்: மு.மேத்தா
மயில் போல பொண்ணு ஒண்ணு…
GiRa ஜிரா 8:48 pm on December 3, 2012 Permalink |
அழகான பாடல். பவதாரணிக்கு தேசியவிருது பெற்றுத் தந்தது அல்லவா?
Prasannaa S (@tcsprasan) 11:00 am on December 3, 2012 Permalink |
Nice GiRa. Superb
GiRa ஜிரா 8:48 pm on December 3, 2012 Permalink |
thanks Prasanna 🙂
anonymous 2:33 pm on December 3, 2012 Permalink |
பெண்ணை மயிலாய்ப் பாவிப்பது… வினைத் தொகை போல முக்காலமும் உண்டு!
சங்கத் தமிழ் முதல் சினிமாத் தமிழ் வரை உண்டு:)
நீங்கள் குடுத்துள்ள ஜென்சி பாட்டும் மயில் போல் அழகுத் தெரிவு தான்; நன்றி
——-
சற்றே பழைய பாடல்கள்:
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு “கோல மயில்” என் துணையிருப்பு
(ரத்தத் திலகம் – கவிஞர் கண்ணதாசன்)
“புள்ளி மயில்” புன்னகையில் என்ன மயக்கம்?
அள்ளி அள்ளிக் கொண்டு செல்ல என்ன தயக்கம்?
வண்ணக் கிளி சொன்ன மொழி..
( – வாலி)
——-
நேற்றைய பழைய பாடல்கள்:
கண்ணே கலைமானே
“கன்னி மயில்” எனக் கண்டேன் உனை நானே
(மூன்றாம் பிறை – கவிஞர் கண்ணதாசன்)
தனிமையிலே வெறுமையிலே – எத்தனை நாளடி “இள மயிலே”
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் – இமைகளும் சுமையடி இளமையிலே
அந்தி மழை பொழிகிறது..
(ராஜ பார்வை – வைரமுத்து)
“மலையோரம் மயிலே” விளையாடும் குயிலே
விளையாட்டைச் சொல்லித் தந்ததாரு?
(ஒருவர் வாழும் ஆலயம் – )
——-
இன்றைய பாடல்கள் – நாளைய பழைய பாடல்கள்:
“மயில் தோகை” ஒன்று மடியில் வந்து சாய்ந்து கொள்ள..
காஞ்சனமாலா காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொல்லாமல் கொல்லும் உன் – கண் என்ன வேலா?
(வந்தான் வென்றான் – கவிஞர் தாமரை)
அடடா மழடா அடை மழைடா, அழகாச் சிரிச்சா புயல் மழைடா
“மயில் தோகை” போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசு வாழும் பாரு..
(பையா – )
anonymous 3:10 pm on December 3, 2012 Permalink |
சில நேரங்களில், சில கவிஞர்கள்… ஆண்களையும் மயிலாய்ப் பாவித்துப் பாடியுள்ளார்கள்:)
என்ன தான் இருந்தாலும், தோகையழகு, உண்மையிலேயே ஆண் மயிலுக்குத் தானே சொந்தம்? அதான் போலவோ?:)
—–
தோகை விரித்தொரு ஆண் மயில் நடனம் ஆடியதே
அருகில் போய் அதை அணைத்திட ஆசை கூடியதே
(கலாபக் காதலன் – கவிஞர் தாமரை)
சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதின்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே!
-ன்னு குறிப்புப் பொருளில், ஒரு ஆணை மயிலாய்க் காட்டுவாரு, சங்கப் பெருங் கவிஞர் கபிலர்:)
—–
மஞ்ஞை – மயிலுக்கு அழகிய தமிழ்ப் பெயர்
– மெல்லின எழுத்து மட்டுமே இருக்கும் ஒரு தமிழ்ச் சொல்
– இறகின் கனம் பறப்பதற்குப் பாரம் ஆயினும் கூட, அதைச் சுமந்து வரும் ஒயில் – அந்த மென்மையால் – “மஞ்ஞை”
மஞ்
– மஞ்சு (மேகம்) – மஞ்சள் – மஞ்ஞை -ன்னு வேர்ச் சொற்கள்!
பல் பொறி மஞ்ஞை
ஆடு சீர் மஞ்ஞை
மா இரும் பீலி, மணி நிற மஞ்ஞை
நறு வீ ஆடிய, பொறி வரி மஞ்ஞை
-ன்னு சங்கச் சொல் அடர்த்தி மஞ்ஞைக்கு;
எல்லாத்துக்கும் மேலா…”அவன்” ஏறிய மயில் ஆதலாலே…
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க!
ச.ந. கண்ணன் 4:19 pm on December 3, 2012 Permalink |
ஜிரா, ஆண் மயிலை சேவல் என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள். ஓகே. ஆனால், ’பெண்ணை மயிலுக்கு ஒப்பிடுவது ஏன், தோகை என்னும் அழகை பெண்ணுக்கு இணைப்பதும் சரியாக இருக்க முடியுமா?’ என்கிற கேள்விகளுக்கான பதில் சரியாக விளங்கவில்லை. இன்னும் தெளிவாக, விவரமாக சொல்லமுடியுமா?
GiRa ஜிரா 8:52 pm on December 3, 2012 Permalink |
ஏன் தோகை என்று சொல்லக் கூடாது? தோகையின் காரணமாக. தோகை அழகைக் குறிப்பது. ஆணுக்கு அழகு தோளில். பெண்ணுக்கு அழகு முகத்தில் என்று சொல்வார்கள். அப்படி பெண்மைக்கு இலக்கணமாகச் சொல்லப்படும் அழகானது தோகையின் மூலம் பெற்றுள்ளதால், மயிலுக்கு ஆண்மைப் பெயரான சேவல் விலக்கப்பட்டுள்ளது. அதனால் ஆண்மைக்கு அடையாளம் சொல்ல முடியாத மயில் பெண்மைக்கு அடையாளமாகிப் போனது. இப்போது புரிகிறதா?
sm 7:52 pm on December 3, 2012 Permalink |
payanagal mudivathillai — தொகை இளம் மயில் ஆடிவருகுது
GiRa ஜிரா 8:53 pm on December 3, 2012 Permalink |
தோகை இளமயில் பாட்டை யாராவது சொல்வார்களா என்று நினைத்தேன். நீங்க சொல்லிட்டிங்க 🙂
Sagar (@npodiyan) 10:01 pm on December 3, 2012 Permalink |
அருமையான விளக்கம்! உடனடியாக ஞாபத்துக்கு வந்த மற்றுமொரு பாடல்:
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது – பூந்தளிர்
GiRa ஜிரா 2:17 pm on December 4, 2012 Permalink |
சூப்பர் பாட்டு இது. எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டு.
@rmdeva 8:27 am on December 4, 2012 Permalink |
ஜிரா, மயில் போல் அழகு. எனக்கு நினைவுக்கு வரும் பாடல்..மயில் ஆடும் தோப்பில் மான் ஆட கண்டெண்
GiRa ஜிரா 2:18 pm on December 4, 2012 Permalink |
wonderful. எத்தனையெத்தனை மயில் பாடல்கள்! இன்னும் எத்தனையிருக்கோ!